லோக்சபா தேர்தலில் ஏ.கே.அந்தோணி போட்டியிட மாட்டார்..
திருவனந்தபுரம்: கடற்படைக் கப்பல்கள் விபத்தில் தலை உருண்டு வரும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லையாம். இதை அவரே கேரள மாநில காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டாராம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்து வரும் ஏ.கே.அந்தோணி பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத ஒரு தலைவர். ஊழல் கரை படியாதவர் என்றும் கூறப்படுவதுண்டு. ராஜ்யசபா எம்.பியாக இவர் இருக்கிறார். காங்கிரஸ் தலைமையின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவர் ஆவார்.
பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அந்தோணி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது அதை மறுத்துள்ளார் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சசிதரன். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தோணி, லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டார். இத்தகவலை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர், தேர்தலில் போட்டியிடுவது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார்.
கேரளாவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். காங்., மேலிடம் முடிவை அறிவிக்கும் என்றார் அவர்.
கடற்படை கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறது. கப்பல்கள் பல தொடர்ந்து விபத்துக்களில் சிக்கி வருகின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று கடற்படைத் தலைமைத் தளபதி ஜோஷி பதவி விலகி விட்டார். அதேபோல அந்தோணியும் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில்தான் தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கேரள காங்கிரஸ் தலைவர் மூலம் அறிவித்துள்ளார் அந்தோணி.