ரயில் நிலையத்தில் கூலி வேலை.. இலவச வைஃபையில் ஐஏஎஸ் கோச்சிங்.. சர்விஸ் கமிஷனில் கலக்கிய கேரள மாணவர்
கேரளாவில் ரயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் இணையத்தில் படித்து கூலித்தொழிலாளி ஒருவர் சர்விஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் நிலையத்தில் உள்ள இலவச வைஃபை மூலம் இணையத்தில் படித்து கூலித்தொழிலாளி ஒருவர் சர்விஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்.
ஸ்ரீநாத் என்ற அந்த இளைஞர், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். போதுமான வருமானம் இல்லாததால், குடும்ப கஷ்டத்திற்காக அவர் இந்த வேலையை பார்த்து வந்துள்ளார்.
ஆனாலும் சிவில் சர்விஸ் எழுத வேண்டும் என்ற கனவு இவரை துரத்தி இருக்கிறது. இதனால் முதலில் கேரளா மாநில சர்விஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அந்த தேர்வை எழுதி இருக்கிறார்.
கிடைக்கவில்லை
ஸ்ரீநாத் இரண்டு முறை கேரளா மாநில சர்விஸ் கமிஷனை எழுதி இருக்கிறார். ஆனால் கூலித்தொழில் செய்து கொண்டே படித்ததால் அவருக்கு சரியாக படிக்க நேரம் போதவில்லை. இதையடுத்து எப்படியாவது தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மூன்றாவது முறையாக தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த முறை ஒரு வருடத்திற்கு முன்பே தீவிரமாக படிக்க புதிய திட்டம் வகுத்து இருக்கிறார். வித்தியாசமான அல்டிமேட் திட்டம்.
கலக்கல்
இணையத்தில் கிடைக்கும் சில சர்விஸ் கமிஷன் சம்பந்தமான பயிற்சி ஆடியோக்களை தினமும் ரயில்வே நிலைய வைஃபை மூலம் டவுன்லோட் செய்து உள்ளார். அதை ஹெட்செட் மூலம் கேட்டுக் கொண்டே, மூட்டை தூக்கும் வேலையை செய்து இருக்கிறார். இப்படியே தினமும் ஹெட்செட் மூலம் புதிய புதிய பாடங்களை இணையத்தில் படித்துவிட்டு அதை வைத்தே பயிற்சி செய்துள்ளார். இணையத்தில் கேரளா அரசு இப்படி நிறைய ஆடியோக்களை வெளியிட்டு இருக்கிறது.
வருவாய் துறையில் வேலை
இதன் மூலம் படித்தே இவர் தற்போது கேரளா மாநில சர்விஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். தற்போது இவருக்கு வருவாய் துறையில் வேலை ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பணி ஆணைக்காக காத்து இருப்பதாக இவர் பேட்டி அளித்துள்ளார். இந்த வேலையை மறக்கவே மாட்டேன் என்றும் அவர் பேட்டி அளித்து இருக்கிறார்.
என்ன கனவு
முதலில் அவர் இப்படி ஹெட் செட்டும் காதுமாக சுற்றுவதை பார்த்துவிட்டு எல்லோரும் கிண்டல் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் தனக்கு தன் மீது நம்பிக்கை இருந்ததாகவும், எப்படியாவது தேர்வில் வெற்றிபெற முடியும் என்பர் உறுதியாக நம்பியதாகும் கூறியுள்ளார். இதற்கு அடுத்த படியாக சிவில் சர்விஸ் எழுதி ஐஏஎஸ் ஆக முயற்சி செய்யப்போவதாக கூறியுள்ளார்.