மும்பை ரயில் பாலம் விபத்தில் சோகம்.. மகப்பேறு விடுமுறைக்கு பிறகு பணிக்குச் சென்ற பெண் பலி
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த பெண் ஒருவர் மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பரிதாபம் நடந்தேறியுள்ளது.
மும்பை: மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த பெண், மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 22 பேரில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாள்களுக்கு முன் அடைமழை பெய்து அந் நகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மும்பையில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது.
காலை 10.30 மணியளவில் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மழையால் ஏராளமான மக்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனை அறிந்த மக்கள் ரயில் நிலைய மேம்பாலத்தில் முண்டியடித்து கொண்டு சென்றனர்.
மகப்பேறு விடுமுறை...
அப்போது ஏற்பட்ட நெரிசலில் 22 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த 22 பேரில் உயிரிழந்த தெரசா பெர்னான்டஸ் மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணிக்கு சென்றவர் என்று தெரியவந்தது.
மீண்டும் பணி
தாதரில் உள்ள பவானி சங்கர் சாலையில் வசித்து வருபவர் ரத்தன் ரதோடு. இவரது மனைவி தெரசா (39). இவர்களுக்கு 8 வயதிலும், 9 மாதத்திலும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வந்த தெரசா பேறு கால விடுப்பில் இருந்தார்.
கூட்ட நெரிசல்
இந்த விடுப்புகள் முடிந்து நேற்று பணிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் நேற்று கிளம்பிய போது மழை பெய்தது. இதற்கு ஒதுங்குவதற்காக ரயில் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அவர் உயிரிழந்துவிட்டார்.
குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு...
இதுகுறித்து ரத்தன் ரதோடும் தெரசா பணியாற்றும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கிறார். அவர் கூறுகையில், அப்போது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு செல்ல புறப்பட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது என்றார்.