பொள்ளாச்சியை மிஞ்சும் தெலுங்கானா.. பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிய சீனிவாச ரெட்டி.. பரபர தகவல்கள்
Recommended Video
திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது உடல்கள் பாழடைந்த கிணற்றில் புதைக்கப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டம் பொம்மள ராமாராவ் மண்டலம் ஹாஜிபூர் கிராமத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்த சிராவனி காணாமல் போனார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் சிராவனி பள்ளிப் பை கிடைத்தது. மேலும் கிணற்றில் இருந்து சிராவனியின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
கைது
பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் புதையுண்ட பெண்கள்
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விசாரணையில் மேலும் ஒரு பெண்ணை கொலை செய்து அதே கிணற்றில் புதைத்ததாக போலீசாரிடம் சீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார்.
எலும்புக் கூடு
இதையடுத்து ராட்சத கிரேன் கொண்டு காவல்துறை ஆணையாளர் மோகன் பகவத் தலைமையில் அங்கு சென்ற போலீசார் அந்த கிணற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேலும் ஒரு மாணவியின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது.
ஒரு மாதம் முன்
இது குறித்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் என்பவரின் மகள் மணீஷா என்பது தெரியவந்தது. மணீஷா பி.காம் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனார்.
பலாத்காரம்
ஆனால் அவரது பெற்றோர்கள் காதல் விவகாரத்தில் மணீஷா வேறு யாருடனோ சென்று விட்டார் என்ற கோபத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சீனிவாச ரெட்டி அளித்த தகவலின் அடிப்படையில் மணீஷா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
மோட்டார் சைக்கிள்
பாழடைந்த கிணறு சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஹாஜிப்பூருக்கு வந்து செல்லக்கூடிய பள்ளி மாணவிகளை பைக்கில் அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற சீனிவாச ரெட்டி இதுவரை எத்தனை பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கிணற்றில் புதைத்து வைத்தார் என்று தெரியாத நிலையில் போலீசார் கிணற்றில் பல இடங்களில் தேடி வருகின்றனர்.
சந்தேகம்
இந்நிலையில் சீனிவாச ரெட்டியின் வீட்டிற்கு ஹாஜிப்பூர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ வைத்து கொளுத்தினர். இதனால் ஹாஜிப்பூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீனிவாச ரெட்டியை தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல் போன ஆறாம் வகுப்பு மாணவி கல்பனா விஷயத்திலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஹாஜிப்பூர் கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியர்
இந்த நிலையில் சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான கிணறு விரைவில் மூடப்படும் என்றும், அந்த கிராமத்திற்கு விரிவான அளவில் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் யாதாத்திரி புவனகிரி மாவட்ட ஆட்சியர் அனிதா ராமசந்திரன் கிராம மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.