தப்பியது சிறுத்தை... பீதியில் உறைந்த மக்கள்... சிலிகுரியில் அலர்ட்
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் பூங்காவில் இருந்து தப்பிய சிறுத்தையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிலிகுரியில் இருக்கும் பெங்கால் உயிரியல் பூங்காவில் சிறுத்தைகளை பார்க்க சபாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
புத்தாண்டு தினமான இன்று, பூங்காவிற்கு குடும்பத்துடன் ஏராளமானோர் வந்திருந்தனர். காலையிலேயே கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில், விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஊழியர்கள் கூண்டை திறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதில், சிறுத்தை ஒன்று கூண்டை விட்டு, லாவகமாக தப்பியது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, பூங்காவை விட்டு அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி பூங்கா மூடப்பட்டது.
வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறுத்தை தப்பியதால் பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.