போதையால் தலைக்கு மேல் ஏறிய கடன்... மனைவியை தம்பியிடமே விற்ற அண்ணன்... 12 வயது மகளையும் விற்க முயற்சி
போதை மற்றும் சூதாட்டத்தால் கடன் சுமை அதிகரித்ததை அடுத்து கட்டிய மனைவியை தம்பியிடமே அண்ணன் விற்ற கொடூரம் நடந்துள்ளது.
அமராவதி: போதை மற்றும் சூதாட்டத்தால் கடன் எகிறிய நிலையில் செய்வதறியாமல் மனைவியை தம்பியிடமே அண்ணன் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில, கொவளகுண்டாவைச் சேர்ந்தவர் மத்திலெட்டி (38). ஆட்டோ டிரைவான இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மத்திலெட்டிக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் கடன் மேல் கடன் வாங்கிவிட்டார்.
இது போதாக்குறைக்கு சூதாட்ட பழக்கமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் அவ்வப்போது தோற்றுவிட்டு பின்னர் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அதிலும் அவர் தோல்வியையே சந்தித்துள்ளார்.
பெண்ணை விற்பனை
இதனால் அவரது கடன் ரூ.15 லட்சத்துக்கு உயர்ந்தது. கொடுத்த கடனை திருப்பி கேட்டு கடன்காரர்கள் வேறு தொல்லை செய்தனர். இதனால் தனது 12 வயது மகளை வயது வரும் வரை காத்திருந்து 1.5 லட்சத்துக்கு விற்பனை செய்ய முயற்சித்து அது தோல்வியில் முடிந்துவிட்டது.
கடன் தொல்லை
இதையடுத்து உறவினர்கள் புத்திமதி கூறியும் குடி பழக்கத்தை அவர் விடவே இல்லை. ஒரு கட்டத்தில் செய்வதறியாது கடன் தொல்லையால் தனது மனைவியையும் குழந்தையையும் தனது தம்பிக்கே விற்பனை செய்ய முடிவு செய்தார்.
தாய் வீட்டுக்கு
இதுதொடர்பாக ஒப்பந்த பத்திரமும் தயார் செய்துவிட்டார். அதில் மனைவியை கையெழுத்திட கோரி அவருடன் அன்றாடம் மல்லுக்கட்டி வந்தார். ஒரு கட்டத்தில் இவர் தொல்லை தாளாமல் மனைவி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
போலீஸார் நடவடிக்கை
அங்கும் சென்றும் மத்திலெட்டியின் மனைவிக்கு அச்சம் வந்துவிட்டது. ஏதேனும் ஒரு வகையில் தன்னையும் 5 குழந்தைகளையும் விற்று விட்டால் என்ன செய்வது என்று. இதனால் நண்டியால் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை தீர்த்து விட போலீஸார் நினைப்பதால் இன்னும் புகாரை பதியவில்லை. கடனுக்காக கட்டிய மனைவியை தம்பிக்கு விற்பனை செய்த அண்ணனை கண்டு அப்பகுதியே அச்சத்தில் உறைந்துள்ளது.