மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியர் அடித்துக்கொலை.. ஜார்க்கண்டில் பயங்கரம்!
ஜார்க்கண்டில் மாட்டுக்கறி எடுத்து சென்ற இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் மாட்டுக்கறி எடுத்து சென்ற இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வேனும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்த மத்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல மாநிலங்களில் மத்திய அரசின் மாட்டிறை மீதான சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளை கொண்டு செல்பவர்களை பசு பாதுகாப்பு கூட்டத்தினர் அடித்து கொலை செய்து வருகின்றனர்.
வேனில் மாட்டுக்கறி
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் அலிமுதீன் என்ற அஸ்கர் அன்சாரி. இவர் தடை செய்யப்பட்ட மாட்டுக்கறியை வேனில் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
சரமாரியாக தாக்குதல்
இதையடுத்து பஜர்தாண்ட் கிராமத்தில் அவரது வாகனத்தை மறித்த ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது.அந்த கும்பல் அவரது வேனையும் தீ வைத்து எரித்தனர்.
உயிரிழந்த நபர்
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
10 பேர் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி அதனை பசுவுக்காக சட்டத்தை மக்கள் கையிலெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடி நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.