செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்!
விசாகப்பட்டினம்: உலகில் எத்தனையோ விலங்குகளை மனிதர்கள் வளர்த்து வந்தாலும் நாய்களுக்கு நிகராக எந்த விலங்கும் ஈடாகாது. தனது விசுவாசமான நன்றியுள்ள குணத்தால் மனிதர்களுடன் ஒன்றுடன், ஒன்றாக நாய்கள் ஐக்கியமாகி விட்டன.
ஒரு சில இடங்களில் பாம்புகளிடம் இருந்து தங்களது எஜமானர்களை காப்பற்றி நாய்கள் உயிரை கூட துறந்துள்ளன. ஒரு சில குடும்பத்தினர் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டால் சோகத்தில் மூழ்கி போவது இயல்பாக நடப்பதுதான்.
வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. அதிரடி காட்டும் ககன்தீப் சிங் பேடி
ஆனால் தான் செல்லமாக வளர்த்து இறந்துபோன நாய்க்கு சிலை வைத்து மரியாதை செலுத்துகிறார் ஒரு மனிதர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் எங்கே நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.
செல்லப்பிள்ளையாக மாறிய நாய்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அம்பாபுரம் கிராமத்தை சேந்தவர் ஞான பிரகாச ராவ். இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தனது பிள்ளைகளுக்கு நிகராக சுமார் 9 வருடங்களாக அந்த நாயை ஞான பிரகாச ராவ் கவனித்து வந்தார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் செல்லப்பிள்ளையாக அந்த நாய் மாறியது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு நாயின் வாழ்க்கையில் விதி விளையாடியது.
விதியின் விளையாட்டு
உடல்நலக்குறைவு காரணமாக அந்த நாய் பரிதாபமாக இறந்தது. நாயின் இறப்பை கண்டு ஞான பிரகாச ராவ் மட்டுமல்ல அவரது குடும்பமே துடித்து போனது. மிகவும் செல்லமாக ஆசை, ஆசையாய் தான் வளர்த்த நாயை மனிதர்களுக்கு செய்வதுபோல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நாயின் நினைவு தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் ஞான பிரகாச ராவ்.
நாய்க்கு வெண்கல சிலை
வளர்ப்பு நாயின் 5-வது ஆண்டு நினைவு சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. வளர்ப்பு நாயின் உருவம் எப்போதும் நீங்காமல் மணத்துக்குள் நின்றதாலும், இனிமேலும் அந்த நினைவுகள் மனதில் நிலைத்திருக்க வேண்டியும் வளர்ப்பு நாயின் உருவத்தில் வெண்கல சிலை செய்தார் ஞான பிரகாச ராவ். 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் நாயின் உருவ சிலையை வைத்து மாலை அணிவித்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள்.
குழந்தை போல் கவனித்தோம்...
''நாங்கள் வளர்ப்பு நாயை ஒரு குழந்தை போன்று கவனித்துக் கொண்டோம். பல ஆண்டுகளாக நாங்கள் இந்த நாயை வளர்த்து வந்தோம். எங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. இந்த வெண்கல சிலை அந்த நாய்க்கு எங்களால் முடிந்த சிறு செயல்தான்'' என்று நன்றி பெருக்குடன் கூறினார் ஞான பிரகாச ராவ்.