நான்தான் மோடிக்கு எல்லாம்.. டெல்லியில் பலபேரை நூதனமாக ஏமாற்றிய மோசடி மன்னன் கைது
பிரதமர் மோடியின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நிறைய பேரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பிரதமர் மோடியின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் நிறைய பேரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ''பிரதமர் நிறைய விஷயங்களை என்னிடம் கேட்டுத்தான் செய்வார்'' என்றும் கூறியிருக்கிறார்.
அவர் இதன்முலம் நிறைய பேரை ஏமாற்றி நிறைய சம்பாதித்து இருக்கிறார். மேலும் இவர் மத்திய அமைச்சரவையில் இருக்கும் சிலரையும் ஏமாற்றியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறிய சோதனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் அரசு சின்னம் பொறித்த வாகனம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் ரைட் ஹேண்ட்
டெல்லியின் புறநகர் பகுதியை சேர்ந்தவர் கன்ஹையா குமார். மிகவும் புத்திசாலியான இவர் பணம் சம்பாதிப்பதற்காக நூதனமான முறை ஒன்றை கடைப்பிடித்து இருக்கிறார். அதன்படி இவர் தன்னை பிரதமரின் ரைட் ஹேண்ட் என்றும் பிரதமருக்கு நான்தான் எல்லாம் என்றும் நிறைய பேரிடம் கூறியிருக்கிறார். பொது மக்களும் போலீசும் நம்ப வேண்டும் என்பதற்காக இவர் நிறைய போலி விசிட்டிங் கார்டுகளை பிரதமர் அலுவலகத்தின் பெயரில் அடித்து இருக்கிறார். அதில் பிரதமர் அலுவலக எண்ணும் இருந்து இருக்கிறது.
நிறைய பேரிடம் பண மோசடி
இந்த நிலையில் அவர் இந்த ஐடி கார்டை வைத்து நிறைய பேரிடம் மோசடி செய்து இருக்கிறார். நிறைய விஷயங்களில் மக்களிடம் உதவுவதாக கூறி பணம் வாங்கி இருக்கிறார். இதில் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சிலரையும் இதன் மூலம் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் எவ்வளவு ஏமாற்றியுள்ளார் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இவர் அரசு சின்னம் பொறித்த வாகனம் ஒன்றை வைத்து பிரதமர் அலுவலகத்தில் சுற்றியிருப்பதாகும் கூறப்படுகிறது.
போலீஸ் கைது செய்தது
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்தாலும் அடிக்கடி தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். இவரை நேற்று பார்த்த டெல்லி போலீசார் அரசு வாகனம் பொறித்த அவரது வாகனத்தை நிறுத்தி விசாரித்து இருக்கின்றனர். அப்போது அவருடைய அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்து இருக்கின்றனர். அப்போது அவர் போலி அடையாள அட்டையை உபயோகித்து ஏமாற்றியது வெளியே தெரியவந்தது.
விசாரணையில் புதிய தகவல்
இந்த நிலையில் போலீஸ் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. அவர் தனது பெயரை கன்ஹையா குமார் என்றும், தான் ஒரு முனைவர் பட்டம் வாங்கிய நபர் என்றும் கூறியிருக்கிறார். பண தேவைகளுக்காக இப்படி செய்ததாகவும் கூறியிருக்கிறார். இவருக்கு ஹைதராபத்தை சேர்ந்த நபர் ஒருவர் போலி ஐடி கார்டுகளை அச்சடித்து அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.