கேரளாவில் ஷாக்: அரிசி திருடியதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை.. சித்ரவதை செய்து செல்ஃபி
கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்களின் காலனிகள் உள்ளன. இங்குள்ள முக்காலி பகுதியை சேர்ந்தவர் மல்லன்.
இவரது மனைவி மல்லி. இவர்களுக்கு 27 வயது மதிக்கத்தக்க மகன் ஒருவர் உள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில மாதங்களாக அங்குள்ள வனப்பகுதியில் ஒரு பாறை இடுக்கில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது ஊருக்குள் வரும் இவர் அங்கு உள்ளவர்களிடம் உணவு கேட்டு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
அரிசி திருடியதாக தாக்குதல்
இந்நிலையில், நேற்று முன்தினம் முக்காலி பகுதியில் ஒரு பையுடன் மது சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதியினர் கடையில் இருந்து அரிசி திருடியதாக கூறி அவரை பிடித்து கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
உடலில் காயங்கள்
பின்னர், அவரை அகளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பார்த்தபோது மதுவின் உடலில் பலத்த காயங்கள் இருந்தன.
ஏற்கனவே உயிரிழப்பு
அவரை ஜீப்பில் ஏற்றி அங்குள்ள மலைவாழ் மக்களின் மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
செல்பி எடுத்த இளைஞர்
மதுவை தாக்கிய இளைஞர்கள் அவரின் கைகளை கட்டி பல்வேறு விதங்களில் போட்டோ எடுத்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் மதுவுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். போட்டோக்களை அவர்கள் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.
15 பேர் கொண்ட கும்பல்
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி திருச்சூர் ஐஜி அஜித்குமார் விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். விசாரணையில் மதுவை தாக்கியது 15 பேர் கொண்ட கும்பல் என்று தெரிய வந்தது.
5 பேரிடம் விசாரணை
இதில் முக்காலியை சேர்ந்த வியாபாரி ஹுசேன், கரீம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பாஜக முழு அடைப்பு
இந்த சம்பவத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மண்ணார்காடு தாலுகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
திருட்டு பழக்கமில்லை
கொல்லப்பட்ட மதுவின் தாயார் மல்லி கூறுகையில், ‘ஊர்மக்கள் சேர்ந்து என் மகனை அடித்து கொன்றுவிட்டனர் என்றும், தனது மகனுக்கு திருட்டு பழக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். யாராவது உணவு கொடுத்தால் வாங்கி சாப்பிடுவான் என்றும் கூறியுள்ளார்.
உறுதி செய்த டிஎஸ்பி
இதுகுறித்து பேசிய அகளி டிஎஸ்பி சுப்பிரமணியம் மது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வனத்தில் வசித்து வந்ததாகவும், குடும்பத்துடன் எந்த தொடர்பும் இன்றி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வைத்திருந்த சாப்பிடும் பொருட்களை பார்த்து திருடியதாக கூறி அவரை இளைஞர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.