ஒடிசாவில் 16 நாள் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு.. தேடுதல் வேட்டையில் தனிப்படை!
ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தை குரங்கு ஒன்றால் தூக்கி செல்லப்பட்டு இருக்கிறது.
புபனேஷ்வர்: ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தை குரங்கு ஒன்றால் தூக்கி செல்லப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையை மீட்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள தாளபஸ்தா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. வீட்டில் அம்மாவுடன் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை வீட்டில் புகுந்த குரங்கு ஒன்று காட்டிற்குள் தூக்கி சென்றுள்ளது.
அந்த குழந்தை பிறந்து 16 நாட்களே ஆகியுள்ளது. தற்போது அங்கு தீயணைப்பு படையினரும், வனத்துறை அதிகாரிகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மொத்தம் 30 பேர் கொண்ட தனிப்படை இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழந்தையின் அழுகையை வைத்து இந்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அந்த காடு மிகவும் அடர்த்தியான பகுதி என்பதால் தேடுதல் வேட்டையில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்கனவே நிறைய குழந்தைகள் குரங்குகள் மூலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.