பயணிகள் விமானம்.. நிறைவேறாமல் போன கலாமின் கடைசிக் கனவு!
பெங்களூர்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நிறைவேறாமல் போன ஒரு சில முக்கியக் கனவுகளில் ஒன்றுதான் - இந்தியாவிலேயே பயணிகள் விமானம் தயாரிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்காக அவர் பெரும் பிரயாசைப் பட்டார். ஆனால் கடைசி வரை நிறைவேற முடியாமல் போய் விட்டது. மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவர் இந்தத் திட்டம் குறித்து ஆர்வம் காட்டினார்.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளின் அபாரத் திறமையைப் பயன்படுத்தியாவது எப்படியாவது "சுதேசி" பயணிகள் வி்மானத்தை இந்தியா உருவாக்க வேண்டும் என்பது கலாமின் தீராத தாகமாக இருந்தது. ஆனால் அவரது இந்தக் கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது.
இந்தத் தகவலை ஐஐடி மும்பையின் விசிட்டிங் பேராசிரியரான டாக்டர் கோட்டா ஹரிநாராயணா ஒன்இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...
கடைசி சந்திப்பு
டாக்டர் கலாமை நான் ஜூன் மாத கடைசி வாரத்தில் சந்தித்தேன். அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது. அப்போது பயணிகள் விமானத் திட்டத்தை எப்படியாவது நாம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் கலாம்.
சொந்த விமானம் கண்டிப்பாக வேண்டும்
இந்தியா சொந்தமாக பயணிகள் விமானத்தைத் தயாரிக்கும் திறனுடன் இருக்க வேண்டும் என்று எப்போதுமே அவர் வலியுறுத்தி வந்தார். அது அவரது தீராத ஆசையாகவும் இருந்தது.
எனக்கும் நம்பிக்கை இருந்தது
எனக்கும் கூட நிச்சயமாக அதை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பயணிகள் விமானத்தைத் தயாரிக்கும்போது அதை டர்போ புரப்பல்லரால் இயங்குவது போல வடிவமைக்க வேண்டும் என்பது கலாமின் ஆசையாகும். அப்போதுதான் அதை ராணுவ காரியங்களுக்காகவும் அதைப் பயன்படுத்த முடியும் என்று கூறி வந்தார் கலாம்.
இரு வேறு கொள்கைகள்
பயணிகள் விமானம் தொடர்பாக இரு வேறு கொள்கைகள் பேசப்பட்டு வருகின்றன. ஒன்று டர்போபேன் இன்னொன்று டர்போபுரப். நான் டர்போரபுரப் திட்டத்தையே ஆதரிக்கிறேன். கலாமும் இத்திட்டத்திற்கே ஆதரவாக இருந்தார். காரணம், இதை ராணுவத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதால்.
சிறிய ரன்வே அவசியம்
மேலும் சிறிய ரன்வேயிலும் இந்த விமானத்தை இயக்க முடியும். சிறிய ரன்வேதான் ராணுவ நடவடிக்கைகளுக்கும் உகந்தது. எனவேதான் இதை நாங்கள் ஆதரித்தோம்.
எல்லாமே டர்போ பேன்
தற்போது உலக அளவில் உள்ள ஐந்து முக்கிய பயணிகள் விமானத் தயாரிப்பாளர்கள் டர்போபேன் முறையிலான விமானங்களைத்தான் தயாரிக்கின்றனர். அதாவது பிரேசிலின் எம்பிரேயர், கனடாவின் பம்பார்டியர், ரஷ்யாவின் சூப்பர்ஜெட், ஜப்பானின் எம்ஆர்ஜே, பிரான்ஸ் - இத்தாலியின் ஏடிஆர்21 ஆகியவை அவை என்றார் அவர்..
தேஜாஸின் தந்தை
டாக்டர் கோட்டா ஹரிநாராயணா இலகு ரக விமானமான தேஜாஸின் தந்தை என்று போற்றப்படுபவர். இவர்தான் இந்தத் திட்டத்தை வடிவமைத்தவர் ஆவார். கலாமுடன் இணைந்து பல திட்டங்களில் செயல்பட்டும் உள்ளார்.