இறுதிச்சடங்கிற்கு பணமில்லை.. பெற்ற மகனின் உடலை தானமாக கொடுத்துவிட்டு கிராமத்திற்கு திரும்பிய தாய்!
இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் பெற்ற மகனின் உடலை தாய் ஒருவர் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துள்ளார்.
ஜக்தல்பூர்: இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் பெற்ற மகனின் உடலை தாய் ஒருவர் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்துள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் பாமன். நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
இதையடுத்து ஜக்தல்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.
ஊருக்கு எடுத்துசெல்ல பணமில்லை
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி பாமன் உயிரிழந்தார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவரான பாமனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல பணமில்லாததால் அவரது தாய் தடுமாறியுள்ளார்.
தாயாருக்கு ஆறுதல்
என்ன செய்வதென்று தெரியாமல் அழுது புலம்பினார் பாமனின் தாயார். இதனை அறிந்து மருத்துவமனைக்கு வந்த பாமனின் உறவினர்கள் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினர்.
தானமாக கொடுத்த தாய்
அவர்களின் நிலையை கண்ட மருத்துவமனை நிர்வாகம் உடலை கொண்டு செல்ல வசதியில்லாவிட்டால், மருத்துவமனைக்கு தானமாக கொடுங்கள் என கேட்டது. இதையடுத்து தனது மகனின் உடலை தானமாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார் அவரது தாய்.
அதிகரிக்கும் அவலம்
மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் இறுதிச்சடங்கு செய்யவும் பணமில்லாமல் மருத்துவமனைக்கு தானாமாக வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல முடியாமால் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.