ராஜஸ்தானில் இஸ்லாமிய மாட்டு வியாபாரி அடித்துக்கொலை.. பசு காப்பாளர்கள் வெறித்தனம்
ராஜஸ்தானில் இஸ்லாமிய மாட்டு வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இஸ்லாமிய மாட்டு வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்காக மாடுகளை வாங்கிச்சென்றவரை இறைச்சிக்காக வாங்கிச்செல்கிறார் எனக்கூறி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சில வெறித்தனமாக அடித்துக்கொன்றுள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த பெஹ்லு கான் என்ற முஸ்லிம் மாட்டு வியாபாரி கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கால்நடைக் கண்காட்சியில் மாடுகளை வாங்கியுள்ளார். அவற்றை ஒரு வாகனத்தில் தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அல்வார் மாவட்டத்தில் அவரது வாகனத்தை மறித்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் பெஹ்லு கான் மற்றும் அவருடன் சென்ற 4 பேரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
கொஞ்சமும் காதில் வாங்கவில்லை
விற்பனைக்காகதான் மாடுகளை வாங்கிச்செல்வதாக பெஹ்லு கான் கூறியதை கொஞ்சமும் அந்தக் கும்பல் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மாடு வாங்கியதற்கான ஆவணங்களை காட்டியும் அதனை பொருட்படுத்தாமல் அந்த கும்பல் பெஹ்லுகான் மற்றும் அவருடன் வந்த 4 பேரை சாலையில் இழுத்து தள்ளி சரமாரியாக தாக்கியது.
சிகிச்சைப் பலனின்றி பலி
இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சைப் பலனின்றி பெஹ்லு கான் உயிரிழந்தார். பசுவுக்காக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சப்பைக்கட்டு கட்டும் அமைச்சர்
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா பசு பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு சப்பைக்கட்டு கட்டும் வகையில் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மாடுகளை கடத்துவது சட்ட விரோதம் என மக்களுக்கு தெரியும். தெரிந்தும் அவர்கள் அதனை செய்கின்றனர்.
குற்றங்களை தடுக்க முயன்றனர்
இந்த குற்றங்களை தடுக்க பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனாலும் சட்டத்தை ஒருவர் கையிலெடுப்பது தவறானதுதான். இரு தரப்பினரும் மீதும் தவறு உள்ளது. போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு
ராஜஸ்தான் அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாட்டின் உயிரும் மனுஷனின் உயிரும் ஒன்றா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே பெஹ்லு கான் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ..