ஆர்எஸ்எஸ் ஸ்டைலில் தற்காப்பு பயிற்சி.. முஸ்லிம் அமைப்பு முடிவு
முஸ்லிம்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முஸ்லிம் அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது சிறுபான்மையினர் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்பட்டுவருகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், முஸ்லிம்களைத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாத் இ உலிமா-இ -ஹிந்த் சார்பில் 'ஜமாத் இ இளைஞர் அமைப்பு' தொடங்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக ஜமாய்த் இ உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மகமூத் மதானி அடுத்து வரும் 10 மாதங்களில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் உறுப்பினர் களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரை போல தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், தியோபந்த் நகரில் உள்ள பிர்தவுஸ் தோட்டப் பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற மதரஸாவான தாரூல் உலூம் பகுதியில் இந்த புதிய இளைஞர் அமைப்பிற்கான தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் குஜராத், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 96 இளைஞர்கள் தங்கள் தற்காப்புக்கலை திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், "தற்போது நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகமாகி வருகிறது. இதன் மீது மத்திய, மாநில அரசுகளும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது முஸ்லிம்களை கவலை அடையச் செய்துள்ளது. இதனால், முஸ்லிம்கள் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
ஜமாத் உலிமா அமைப்பு 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயர் ஜமாத் இ உலிமா-இ-ஹிந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சன்னி பிரிவு முஸ்லிம்களின் முக்கிய சமூகநல அமைப்பாகக் கருதப்படும் இந்த அமைப்பில் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.