மகாராஷ்டிராவை அதிர வைத்த ஆணவக்கொலை.. 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்!
மகாராஷ்டிராவில் 3 தலித் இளைஞர்களை ஆணவக்கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாசிக்: மகாராஷ்டிராவில் 3 தலித் இளைஞர்களை ஆணவக்கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அஹமந்த்நகரை சேர்ந்த 24 வயது இளைஞர் கரு. இவரது நண்பர்கள் தன்வார் மற்றும் கந்தாரே இவர்கள் மூவரும் நெவேஸா பகுதியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் பணிபுரிந்து வந்தனர்.
அப்போது அந்த கல்லூரியில் மாணவியாய் இருந்த சோனாய் கிராமத்தை சேர்ந்த உயர் சமூக பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிய வர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புத்தாண்டில் அழைத்து..
இதையடுத்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்ய காதல் ஜோடிகள் முடிவு செய்தன. இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கருவை தங்களின் வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
செப்டிக் டேங்கை சுத்தத்செய்ய
அவர்களை நம்பி கருவும் தனது நண்பர்களான 25 வயது தன்வார் மற்றும் 20 வயதான கந்தாரே உடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தங்களின் வீட்டு செப்டிக் டேங்கை அவர்கள் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
செப்டிக் டேங்குக்குள் வீச்சு
முதலில் கருவை தனியே அழைத்து சென்ற பெண்ணின் குடும்பத்தினர் அவரது தலையை தனியே துண்டித்துள்ளனர். பின்னர் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி செப்டிக் டேங்குக்குள் வீசி மூடியுள்ளனர்.
பாழடைந்த கிணற்றில் புதைப்பு
பின்னர் தன்வாரையும் கந்தாரேவையும் மண்வெட்டியால் தாக்கி கொன்ற அவர்கள் 2 பேரின் உடலையும் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் புதைத்துள்ளனர். 3 பேரும் திடீரென மாயமானதால் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
உடல்கள் மீட்பு
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் கொலை நடந்த 24 மணி நேரத்துக்குப் பிறகு கருவின் உடல் பாகங்களை செப்டிக் டேங்கில் இருந்து கைப்பற்றினர். மேலும் 72 மணிநேர விசாரணைக்குப் பிறகு கிணற்றில் புதைக்கப்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
5 ஆண்டுகளாக விசாரணை
இந்த ஆணவக் கொலை சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 54 சாட்சிகளை கொண்டு 5 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நாசிக் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
6 பேருக்கு மரண தண்டனை
இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் விடுவித்தது. மேலும் மாணவியின் தந்தை உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
ரூ.20000 அபராதம்
பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் தலா 20,000 ரூபாயை கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சாகும்வரை தூக்கிலிடுங்கள்
மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இதுபோன்ற மக்களுக்கு இந்த சமூகத்தில் வாழ உரிமையில்லை என்றும் சாகும் வரை அவர்களை தூக்கிலிடுவது மட்டுமே சமூகத்தை காப்பாற்ற ஒரே வழி என்றும் நீதிபதி வைஷ்ணவ் கூறினார்.