ரூ. 9,000 சம்பளம், பிரசவ விடுப்பு- வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளிச்சம் தரும் புதிய கொள்கை!
டெல்லி: இந்தியாவில் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 9 ஆயிரம் சம்பளமும், ஆண்டுக்கு 15 நாள் சம்பளத்துடன்கூடிய விடுமுறையும், பிரசவ விடுப்பும் வழங்க வகை செய்து மத்திய அரசின் தொழிலாளர் கொள்கை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வீட்டு வேலைக்கார பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். வயதான காலத்தில் வேலையை விட்டு நீக்குகிறபோது, அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடுகிறது" என்ற கருத்துகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வர உள்ளது.
இதனை பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தயாரித்து வருகின்றது. முக்கிய பல நல்ல மாற்றங்களை வித்திட இது அடிப்படை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவற்றில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
வீட்டில் தங்கி இருந்து முழு நேர பணி செய்யும் வேலைக்கார பெண்களுக்கு மாதம் ரூபாய் 9 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.
பிரசவ கால விடுமுறை அவசியம்:
பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும். வயதான காலத்தில் வேலைக்கார பெண்களுக்கு உதவுகிற விதத்தில் ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். அதில் அவர்களது எஜமானர்கள் கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் குறைபாடுகள்:
பாலியல் தொல்லை, கொத்தடிமை முறைக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வர வேண்டும். வேலைக்காரப்பெண்கள் கல்வியை தொடர்வதற்கு, பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு, குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
அமைச்சரின் ஒப்புதலுக்கு வெயிட்டிங்:
இந்த அம்சங்களை கொண்ட கொள்கை குறிப்புகளை தொழிலாளர் நலன் தலைமை இயக்குனர் தயார் செய்து, மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அளித்துள்ளார்.
வேலைக்கார பெண்களின் நலன் முக்கியம்:
இது தொடர்பாக பண்டாரு தத்தாத்ரேயா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வீட்டு வேலைக்காரப் பெண்களுக்கான கொள்கை வகுக்கப்படும். வேலைக்காரப்பெண்கள் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். எனவே அவர்களது நலன்களும், பாதுகாப்பும் மிகவும் முக்கியம். சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு ஏற்ற தரத்தில் இந்த தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும்" என கூறினார்.
உரிமையாளர்கள் கவனத்திற்கு:
மத்திய அரசு இந்த கொள்கையை வகுத்து வெளியிட்டு விட்டால், அதை வீட்டு உரிமையாளர்கள் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.