ஒடிசா மில்லட்ஸ் மிஷன்.. பாரம்பரிய உணவு பயிர்களை மீட்கும் முயற்சி.. நவீன் பட்நாயக் அரசு புது புரட்சி!
புவனேஸ்வர்; ஒடிசாவின் பழங்குடியின மக்களின் மண்ணில் ஒரு புரட்சி உருவாகி வருகிறது. இதன் போராளிகளாக அரிவாளும், மண்வெட்டியும் கொண்ட புரட்சியாளர்கள் உள்ளனர். இது கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சர் நவீன் பட்நாயக் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒடிசா மில்லட்ஸ் மிஷன்' என்பதுதான் இந்த புரட்சியின் பெயர். இதன் நோக்கம் பாரம்பரிய உணவு பயிர்களை மீட்டு கொண்டு வருவதுதான்.
பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், நிலையான விவசாயம் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு கொள்கையை ஒடிசா மாநிலம் உருவாக்க நினைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த திட்டம். இது நாட்டின் இதர பகுதிகளுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து காலநிலைகளையும் எதிர்கொண்டு வளரும் பயிர்களை உருவாக்கும் இந்த திட்டத்தை மாநிலம் செயல்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் போது செயல்பாட்டின் விலை நடவடிக்கை செலவை விட அதிகம் என்பதை உணர்ந்த முதல் மாநிலம் ஒடிசாதான்.
மக்களின் உணவு முறையில் தினைகளை சேர்க்கும் வகையில், மாநிலத்தின் பழங்குடியின பகுதிகள் மற்றும் பண்ணைகளில் சிறுதானியத்தை பயிரிடும் முயற்சி ஐந்தாண்டு கால ஆய்வுத் திட்டமாக மாநில அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் அதிகாரமளித்தல் துறையால் தொடங்கப்பட்டது. இந்த புரட்சிகரமான திட்டத்திற்கு பெயர்தான் 'ஒடிசா மில்லட் மிஷன்'.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பது இவற்றுடன் கால நிலை மாற்றத்தை கணக்கில் கொள்வது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய குறிக்கோள்களாகும். அந்த வகையில் ஆய்வு முறையாக இந்த 'ஒடிசா மில்லட் மிஷன்' தொடங்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் அது விதைத்ததை விட அதிகமாக அறுவடை செய்துள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்தை 2022 ஆம் ஆண்டில் 142 தொகுதிகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 1.5 லட்சம் விவசாயிகள் தினை விவசாயத்திற்காக 75,000 ஹெக்டேர்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை பயிரிடுவதை ஊக்குவிக்கும் இந்த விவசாய முயற்சி, ஒடிசாவின் பழங்குடியினரின் பாரம்பரிய உணவை மீண்டும் உணவு பழக்க வழக்கங்களில் கொண்டு வருவது என்கிற இலக்கை கடந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், புத்துயிர் பெறவும், சிறுகுறு விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை வழங்கவும் வழிவகை செய்துள்ளது. இந்த திட்டத்தில் அரசு உறுதியுடன் உள்ளதால் விவசாயிகள் மீண்டும் சிறுதானிய விவசாயத்திற்கு திரும்பி வருகின்றனர். ஏற்கெனவே பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்டவற்றை அவர்கள் மீண்டும் பயிரிட முன்வரவில்லை. தங்கள் முன்னோர்களின் வேளாண் முறையை அவர்கள் தற்போது பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
பல்வேறு மற்றும் வெளிப்படையான காரணங்களுக்காக, ஒடிசா அரசாங்கம் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கத் தேர்ந்தெடுத்தது. சிறுதானியங்கள் இயற்கையாகவே சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைவதும் இதற்கு காரணமாகும். சிறுதானியங்கள் புல் வகையை சேர்ந்தவையாகும். இது சுய-மகரந்தச் சேர்க்கை பயிர் என்பதால் மற்ற நெல், கோதுமை உள்ளிட்ட தானிய பயிர்களை போன்ற கண்காணிப்பு இதற்கு அவசியமில்லை. மட்டுமல்லாது, ஒடிசா மாநிலம் வருடத்தில் பல நாட்களில் வங்கக் கடலிலிருந்து புயல்களை எதிர்கொள்கிறது. எனவே இந்த சிறுதானிய பயிர்களின் வேர்கள் அதிக பிடிமானத்தை கொண்டவை என்பதால் மாநிலத்தின் மண் அரிப்பையும் தடுக்க இது உதவும்.
பொதுவாகவே சிறுதானியங்கள் வளங்கள் குறைந்த மண் கொண்ட பகுதிகளிலும், மலை பாங்கான பகுதிகளிலும் அதேபோல குறைந்த மழை அதிக வெப்பம் உள்ள பகுதிகளிலும் செழித்து வளரும் திறன் கொண்டவையாகும். உதாரணமாக ஒடிசாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் சிவப்பு மற்றும் ஆழமற்ற கருப்பு மண்ணில் கேழ்வரகு செழிப்பாக வளரும். நாம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம், வறட்சி போன்ற மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எதிர்கால சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றவும் இயற்கையின் சமநிலையை பேணவும் ஒடிசா அரசாங்கம் இந்த முயற்சியை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்டு இரட்டிப்பாக்கியுள்ளது.
நாம் எதிர்பார்த்ததைவிடவும் இந்த திட்டத்தின் பலன் பெரிய அளவில் வெற்றியை கண்டுள்ளது. ஏனெனில், சிறுதானிய பயிர்கள் கார்பனை எடுத்துக்கொள்கின்றன. இதனால் வளி மண்டலத்தில் கார்பன் அளவு குறைந்து வெப்பநிலையும் சமனில் உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் முதன் வரிசையில் எப்போதும் சிறுதானிய பயிர்கள் உள்ளன. மண்ணின் வளத்தை சீரழித்து, நில பல்லுயிர் பெருக்கத்தை பாதித்த செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஒற்றை பயிர் வேளாணை ஊக்குவித்திருந்தது. இதன் காரணமாக சமீப ஆண்டுகால சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்து வந்தது. தற்போது இது மீட்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கும் போதிய வருமானம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நெல், கோதுமை போன்ற தானியங்களை போல சிறுதானியங்கள் நீண்ட காலத்திற்கு வளர்வதில்லை, நெல் குறைந்தபட்சம் 5 மாதங்கள் எனில், சிறுதானிய பயிர்கள் 2-3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மேலும் பூச்சி தாக்குதலில் அதிக அளவு பாதிக்கப்படாது. நெல் ஈரமான நிலத்தில் மட்டும்தான் விளையும், ஆனால் இந்த சிறுதானியங்களை குறைந்த நீர் கொண்டு ஆண்டு முழுவதும் பயிரிடலாம். அதேபோல மற்ற தானியங்களை காட்டிலும் சிறுதானியங்கள் அதிக காலத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடியவையாகும். மட்டுமல்லாது நெல்லை விட சிறுதானியமான கம்பை பயிரிட குறைந்த முதலீடு இருந்தால் போதுமானதாகும்.
அரசாங்கத்தின் இந்த புதிய முயற்சி, மாநிலத்தின் மகளிர் சுயஉதவி குழுக்கள், பிராந்திய கல்வி மையம், வனம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் (CREFTDA) மற்றும் கிரா ஸ்வராஜ் போன்ற உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயிர் செய்யப்படும் சிறு தானியங்களுக்கு கால்நடை சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விதைகள், உரங்கள், பூச்சி கொல்லி மருந்து புங்கமர, வேப்பமர, எருக்க செடி இலைகள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்டு இந்த பயிரிடலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பல பயிர் சாகுபடி வானிலை மாற்றத்தை சமாளிக்கவும், பூச்சி தொல்லைகளிலிருந்து தப்பிக்கவும் செய்கிறதால் ஏதாவது ஒன்று இழந்தால் கூட மற்றொன்று பிழைத்துக்கொள்கிறது. அதேபோல இதன் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றன. இதன் காரணமாக விலங்கு மேய்சலுக்கு பல இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதிக மழைபொழிவையும் இந்த வகை பயிர்களுக்கு வேண்டியதில்லை என்பதால், விவசாயிகள் மழையைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. எனவே மாநிலத்தின் மலை பரப்புகளில் இந்த பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன.
எழுத்தாளர்: மிஸ்ரா மனோஜ்,
ஒடிசா முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி
எலக்ட்ரானிக்ஸ் & ஐடி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையின் செயலாளர்
தொடர்புக்கு: [email protected]