ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆய்வு
இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
மேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதி விலகல்
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வசீப்தர்.
தருண் அகர்வால் நியமனம்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
6 வாரத்தில் ஆய்வு அறிக்கை
புதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.