ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருகிற 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
மார்கெட்டுகள், அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் மாலைக்குள் மூடப்படும். இந்த உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா விஸ்வரூபம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் மீண்டும் அதிவேகத்தில் உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகள் 1,60,000-ஐ கடந்து உச்சம் தொட்டு வருகின்றன. கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
ராஜஸ்தானில் அதிக பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலத்திலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் ராஜஸ்தானில் 6,200 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஜெய்ப்பூரில் மட்டும் 1,325 பாதிப்புகள் உள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் கடந்த மாதம் இரண்டு சதவீதத்திலிருந்து இப்போது கிட்டத்தட்ட எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்தது.
இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில் வருகிற 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது 16-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு ஊரடங்கு அமலில் இருக்கும். அதாவது அனைத்து கடைகள், நிறுவனங்கள் மாலை 5 மணிக்குள் அடைக்கப்படும்.
எதற்கெல்லாம் விலக்கு?
மார்கெட்டுகள், அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் மாலைக்குள் மூடப்படும். இந்த உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பொது இடங்களில் கூடுவது மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது என்றும் ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.