சுமை கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்... ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 1.14 செலவு!
டெல்லி: ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க இந்திய ரூபாய் நோட்டு அச்சடிப்புக் கழகத்திற்கு ரூ.1.14 செலவாவதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதேபோல், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளும் நிறுத்தப் பட்டன. அதிக செலவு ஆவதால் இந்த ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் படுவது நிறுத்தப் படுவதாக தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சடித்து வெளியிட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் சுபாஷ்சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் கேட்டிருந்தார். அதாவது, அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து உள்ளது. ஆனால், ஒரு ரூபாய் நோட்டில் மட்டும் நிதித்துறை செயலாளர் கையெழுத்து இடம்பெற்றுள்ளது தொடர்பாக அவர் விளக்கம் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக இந்திய ரூபாய் நோட்டு அச்சடிப்பு கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ‘ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கு 1 ரூபாய் 14 காசு செலவாகிறது' என்று கூறப்பட்டுள்ளது.