பூரி ஜெகந்நாதர் கோயிலில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம்.. காமக்கொடூரனை துவைத்த மக்கள்!
ஓடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை பொதுமக்களே அடித்து துவைத்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பரிபாதா: ஓடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒடிசா மாநிலம் பரிபாதாவில் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோயில் வெறிச்சோடியிருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த குருசரண் பெக்ரா என்ற 28 வயது நபர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து குளத்திற்கு அருகே அழைத்துச் சென்றுள்ளார்.
சாக்லெட் கொடுத்து பலாத்காரம்
பின்னர் அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மோசமான நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் சிறுமி
பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த நபரை மடக்கிப்பிடித்த அப்பகுதி மக்கள் அவருக்கு மரண அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தண்டனை வழங்கக்கோரி போராட்டம்
மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ள நிலையில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சப்-கலெக்டர் நிதியுதவி
இதனிடையே அம்மாவட்ட சப்-கலெக்டர் சிறுமியின் சிகிச்சைக்காக அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் வகையில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.