புதிய கிரகத்துக்கு இந்திய இளம் பெண் சாஹிதி பிங்காலி பெயர்! யார் இவர் தெரியுமா?
நியூயார்க்: விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு நீர் நிலைகள் மாசுபடுவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட பெங்களூர் மாணவியின் பெயர் சூட்டப்படும் என்று லிங்கன் அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் சாஹிதி பிங்காலி (16). இவர் இன்வென்சர் அகாதெமியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே அறிவியல் துறையில் ஆர்வம் அதிகமாக உள்ள சாஹிதி, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் அண்மையில் பங்கேற்றார். உலக முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பெங்களூரில் உள்ள ஏரிகளில் மாசு ஏற்படுவது குறித்தும், தூய்மையாக பாதுகாப்பது குறித்தும் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும் ஏரி, ஆறு, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும்.
இதைத் தொடர்ந்து சாஹிதி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் பெங்களூரில் மாசடைந்த ஏரியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக அவரது ஆய்வு இருந்தது.
இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம், சாஹிதியின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் விதமாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு சாஹிதியின் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சாஹிதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.