நான் எடுத்த முடிவுகளால்தான் செல்போன் கட்டணம் குறைந்தது.. 2ஜி வழக்கில் ஆ.ராசா வாதம்
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தான் எடுத்த முடிவுகளால்தான் செல்போன் கட்டணம் குறைந்ததாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இறுதி வாதத்தில் முன்வைத்தார்.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தான் எடுத்த முடிவுகளால்தான் செல்போன் கட்டணம் குறைந்ததாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இறுதி வாதத்தில் முன்வைத்தார். சிபிஐ தரப்பின் இறுதி வாதத்துக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் பல லட்சம் கோடிகளுக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று முதல் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது ராசா வாதிடுகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைப்படி, அலைவரிசை ஏலம் இல்லை என்பதும், நுழைவுக்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பதும் சரியான முடிவுதான் என்று நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் விளக்கம் அளித்த பிறகும், அந்த பரிந்துரைகளை நான் செயல்படுத்தியது எப்படி அதிகார துஷ்பிரயோகம் ஆகும்?
நான் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரோ, நிர்வாகியோ அல்ல. அப்படிப்பட்ட நிலையில், அந்த தொலைக்காட்சிக்கு சுவான் நிறுவனம் தொடர்புடைய நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகையை, எனக்கு வழங்கப்பட்ட லஞ்சமாக கருத சட்டம் இடம் அளிக்குமா என்ன?
இந்த வழக்கில், நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே.
இந்த முடிவுகளால்தான் நாட்டின் தொலைத்தொடர்பு அடர்த்தியை கணிசமாக உயர்த்துவதற்கும், கட்டண குறைப்புக்கும் காரணமாக அமைந்தன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் பொய்யானவை என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பின் இறுதி வாதத்தை வருகிற 27-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதை நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு, தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.