கார்ப்பரேட் போரா, ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியா?... 2ஜி பின்புலத்திற்கு விசாரணை ஆணையம் கோரும் ஆ.ராசா!
2ஜி விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மவுனமே அந்த ஆட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : 2ஜி விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மவுனமே அந்த ஆட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார் என்றும், 2ஜி வழக்கின் பின்புலம் என்னவென்று விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா கூறியதாவது, எனக்கு இயற்கை நீதி வழங்கப்படாததால் என் மீதான குற்றச்சாட்டுகளை விளக்கவே வேறு வழியில்லாமல் சிறையில் இருந்த போது புத்தகம் எழுத சிறையில் இருந்தே திட்டமிட்டேன். இதற்காக ஆவணங்களை சேகரித்து கடந்த ஆண்டே புத்தகத்தை எழுதி முடித்துவிட்டேன்.
தீர்ப்புக்கு பிறகு புத்தகத்தை வெளியிடலாம் என்று சிலர் கூறியதால் தற்போது வெளியிட்டிருக்கிறேன். புத்தகத்தில் அரசியல் ரீதியாகவும், வழக்கிலும் எனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். என்னுடைய அனுமானத்தில் நாட்டிற்கு நல்ல திட்டங்களை தந்து கொண்டிருந்த யுபிஏ2 அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஒரு சதி நடந்திருக்க வேண்டும்.
ஐ.மு.கூ அரசை வீழ்த்த சதி
அந்த சதிக்கு வினோத்ராய் வேண்டுமென்றே அவருடைய துறையே ஒப்பு கொள்ளாத 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மோசடி என்று திட்டமிட்டே நாட்டை ஏமாற்றி அரசை வீழ்த்தி இருக்கிறார். அலைவரிசை ஏலம் விடுவதிலோ, விதிமுறைகளை மாற்றியதிலோ தவறில்லை ஆனால் உரிமங்கள் வழங்கியதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மன்மோகன்சிங் தவறாக வழிநடத்தப்பட்டார்
பிரதமர் மன்மோகன் சிங் 2ஜி விவகாரத்தில் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார், தவறு நடந்திருக்கலாம் என்று பிரதமர் விசாரணை அமைப்புகளால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. 2ஜி விவகாரத்தில் அவர்கள் காட்டிய மவுனம் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 அரசை வீழ்த்தியது. உச்சநீதிமன்றத்திற்கெல்லாம் பயப்படாமல் உள்ளதை உள்ளபடி அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்.
விசாரிக்க வேண்டும்
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலோ விசாரணை கமிஷன் அமைத்து 2ஜி விவகாரத்தின் பின்புலம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டியின் விளைவா அல்லது மன்மோகன் சிங் அரசை வீழ்த்துவதற்காக அரசியல் ரீதியாக சதி தீட்டப்பட்டதா, கட்சிக்கு உள்ளிருந்து நடந்ததா வெளியில் இருந்து தூண்டுதல் நடந்ததா என்று விசாரிக்க வேண்டும்.
கருணாநிதி, ஸ்டாலினுக்கு நன்றி
இது குறித்து விரைவில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத உள்ளேன். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து இந்த விஷயங்களையெல்லாம் சொல்லி அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பேன். 2ஜி விவகாரத்தில் கருணாநிதியும், ஸ்டாலினும் எனக்கு பக்க பலமாக இருந்தார்கள், அவர்கள் இல்லையென்றால் ராஜா இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் என்றும் ராசா கூறியுள்ளார்.