கேரள சர்ச்சில் மகாதேவன் யானைக்கு ஆசிர்வாதம்...ஏன் தெரியுமா?
கேரள சர்ச்சில் இளம் பாதிரியார் ஒருவர் மகாதேவன் என்ற 20 வயது யானைக்கு ஆசிர்வாதம் அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
திருவனந்தபுரம் : கோட்டயம் அருகேயுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 20 வயது யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து அந்த யானையின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியதால் சர்ச்சை வெடித்தது.
கிறிஸ்தவ மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் எடுப்பது அவர்களது வழக்கத்தில் உள்ள ஒரு விஷயம். ஆனால் கோட்டயத்தில் நடந்த ஆசிர்வாதம் அளிக்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
கோட்டயம் மாவட்டம், அருவிதாரா என்ற இடத்தில், கத்தோலிக்க சர்ச் உள்ளது. இங்கு கடந்த வியாழனன்று, 20 வயது யானைக்கு இளம் பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் அளித்துள்ளார்.
ஆச்சரியம் இல்லை
இது குறித்து அந்த சர்ச்சின் மூத்த பாதிரியாளர் தாமஸ் வெடிகுன்னெலிடம் கேட்ட போது, '' ஒரு யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது. சர்ச்சை சேர்ந்த இளம் பாதிரியார் ஆசிர்வாதம் அளித்துள்ளார். இதில் என்ன அதிசயம் உள்ளது" . யானைக்கு ஞானஸ்தானம் அளிக்கப்படவில்லை, ஆசிர்வாதம் தான் அளிக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்தார்.
செல்லப்பிராணி
கேரளாவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ், அந்த சர்ச்சின் உறுப்பினராக உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது "எனது பழதோட்டத்தில், பல ஆண்டுகளாக, 50 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
யானைக்கு ஆசிர்வாதம்
சர்ச்சில் ஆசிர்வாதம் பெற்ற யானை, என் உறவினருக்கு சொந்தமானது. அந்த யானையின் பெயர், மகாதேவன்; 20 வயது இருக்கும். சர்ச்சில் ஆசிர்வாதம் பெற்றதால், யானையின் பெயர் மாற்றப்படும் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கவனத்தை ஈர்த்த சம்பவம்
எனினும் இதுவரை இல்லாத வகையில் சர்ச்சில் ஒரு யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரளாவில் யானைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருபவர்கள் அவற்றை தங்களின் குடும்பத்தில் ஒரு நபராகவே கருதுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.