தனி பிளாஸ்டிக் நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட சாமியார் ராம் ரஹீம்சிங்!
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம் ரஹீம்சிங் தனது ஆசிரமத்தில் தனி பிளாஸ்டிக் நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிர்சா: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைதாகியவரும் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவருமான ராம் ரஹீம் சிங் அவருடைய ஆசிரமத்தில் தனி பிளாஸ்டிக் நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
1000 ஏக்கர்
பாலியல் வழக்கில்குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த 1000 ஏக்கர் நிலப்பரப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. அங்கிருந்த ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பிளாஸ்டிக் நாணயங்கள்
தற்போது ஆசிரமத்தில் பிளாஸ்டிக் நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தேரா ஆசிரமத்தை சுற்றியுள்ள கடைகளின் பெயருக்கு முன்னால் உண்மை என்ற வார்த்தையுடன் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். இங்கு பொருள்கள் வாங்குவோருக்கு அளிக்க சில்லறை இல்லாவிட்டால் கடைக்காரர்கள் ரூ.10, ரூ.5 மதிப்பில் அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் நாணயங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
புழக்கத்தில்...
சுற்றியுள்ள கடைகளில் ஒருவர் ரூ.70 மதிப்புள்ள பொருள்களை வாங்கும்போது அவர் கடைக்காரரிடம் ரூ.100-ஐ தருவார். அப்போது கடைக்காரர் தன்னிடம் ரூ.30 சில்லறை என கூறி சாமியார் ஆசிரமத்தில் அச்சடிக்கப்பட்ட ரூ.10 மதிப்பிலான பிளாஸ்டிக் நாணயங்கள் மூன்றை தருவார்.
பழுப்பு நிற நாணயம்
அந்த நாணயங்களானது பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் தன் தன் சத்குரு தேரா சச்சா சவுதா சிர்சா என்ற ஆசிரமத்தின் பெயரும் அமைப்பின் பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்தக் கடைக்காரர்கள் சாமியாரின் பக்தர்களாவர். சிர்சா நகரில் சினிமா தியேட்டர், மருத்துவமனை, பள்ளிகள் என 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை சாமியார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.