தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பயங்கரம்.. குழந்தை கடத்த வந்தவர் என இன்ஜினியர் அடித்துக்கொலை
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
Recommended Video
பெங்களூர்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
தமிழகத்தில் வடமாநில கும்பல் குழந்தைகளை கடந்த முயற்சிப்பதாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் குழந்தைகளுடன் பேசும் வெளி நபர்களை கண்டாலே மக்கள் சந்தேகம்கொள்ள ஆரம்பித்தனர்.
இதன் வெளிப்பாடாக திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் குழந்தை கடத்த வந்தவர் என கூறி அப்பாவி மக்கள் பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இதனை தடுக்க காவல்துறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இன்ஜினியர் அடித்துக்கொலை
இந்நிலையில் இந்த கொடூரம் கர்நாடகாவுக்கும் பரவியுள்ளது. ஆம் ஹைதராபாத்தை சேர்ந்த சாஃப்ட் வேர் இன்ஜினியர் ஒருவரை குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து கிராம மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தில் பணி
ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் முகமது அஸம். 32 வயதாகும் இவர் ஐதராபாத் கச்சி பாவ்லியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
2 வயதில் மகன்
இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன் இருக்கிறான். ஹைதராபாத் எர்ரகுந்தா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கர்நாடகா சென்றார்
இவரது நண்பர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் நூர்முகமது, சல்மான் ஆகியோர் ஹைதராபாத் வந்தனர். இவர்கள் 3 பேருடன் முகமது அஸம் கர்நாடக மாநிலம் பிதர்நகரில் நடைபெறும் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டு இருந்தார்.
வெளிநாட்டு சாக்லேட்
வழியில் கமால்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பள்ளி அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது கத்தார் நண்பரான சலாம், கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தார்.
கிராம மக்கள் சந்தேகம்
குழந்தைகளிடம் விசாரித்தப்படி அவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். இதனைக்கண்ட கிராம மக்கள் அவர்கள் குழந்தை கடந்த வந்த கும்பல் என நினைத்து சுற்றிவளைத்து தாக்க முற்பட்டனர்.
தப்ப முயன்ற நண்பர்கள்
எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்காத மக்கள் அவர்களை விடுவதாய் இல்லை. இதையடுத்து தப்பித்தால் போதும் என எண்ணிய அவர்கள் காரை எடுத்துகொண்டு தப்ப முயன்றனர்.
சரமாரி தாக்குதல்
ஆனால் அவர்களை விடக்கூடாது என்று முடிவு செய்த கிராம மக்கள் பக்கத்து கிராம மக்களிடம் பேனில் பேசி காரில் வருபவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை மடக்கி பிடியுங்கள் என்றனர். இதையடுத்து காருக்காக காத்திருந்த அவர்கள் கார் வந்ததும் உள்ளே இருந்தவர்களை இழுத்து போட்டு சராமாரியாக தாக்கினர்.
இன்ஜினியர் அடித்துக் கொலை
இதில் முகமது அஸம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். மற்ற 3 பேரும் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி காரில் சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.
அப்பாவி கொலை
இந்த சம்பவத்தால் முகமது ஆஸமை பறிகொடுத்துள்ள அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர். அப்பாவியை அடித்துக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டை காலிசெய்த மக்கள்
இந்த சம்பவம் தொடர்பாக பிதர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் போலீஸ்க்கு பயந்து வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.