8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்!
மத்திய பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோரை தையல்காரர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோரை தையல்காரர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஆதேஷ் கம்ப்ரா. 48 வயதான இவர் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சந்தேக வழக்கு ஒன்றில் கடந்த வாரம் போலீசார் ஆதேஷ் கம்ப்ராவை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிரச் செய்துள்ளது.
குறைந்தது 33 கொலை
அதாவது கடந்த 8 ஆண்டுகளில் குறைந்தது 33 பேரை துடிக்க துடிக்க தான் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் ஆதேஷ் கம்ப்ரா. கொலை செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.
பணம் சம்பாதிக்கும் வெறி
மேலும் சரக்கு பொருட்களுடன் ட்ரக்குகளை கொண்டு வரும் நபர்களை கொன்றுவிட்டு ட்ரக் மற்றும் அதில் இருக்கும் பொருட்களை விற்பது வாடிக்கை என்றும் கூறியுள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலை பார்ட் டைமாக செய்து வந்ததாகவும் ஆதேஷ் கம்ப்ரா தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி வாக்குமூலம்
மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள பல ரவுடி கும்பல்களுடன தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு கூலிப்படையாக பல கொலைகளை செய்துள்ளதாகவும் கூறி திகிலடையச் செய்துள்ளார் ஆதேஷ். ஆதேஷின் வாக்குமூலம் மட்டும் அதிர்ச்சியை தரவில்லை. அவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட விதமும் த்ரில்லிங்காகவே உள்ளது.
இரும்புடன் ட்ரக் மாயம்
ஆதேஷ் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி ராகுல் குமார் லோதா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவலாவது, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி 50 டன் இரும்பு கம்பிகளுடன் வந்த ட்ரக் ஒன்று திடீரென மாயமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.
ஓட்டுநர் சடலம்
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பில்கிரியா பகுதியில் ட்ரக்கின் ஓட்டுநர் மக்கான் சிங் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3வது நாள் அயோத்யா நகர் பகுதியில் இரும்புகள் இன்றி காலி ட்ரக் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூளையாக செயல்பட்ட கம்ப்ரா
இதுதொடர்பான விசாரணையில் இரும்பை விற்ற மற்றும் வாங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது ஆதேஷ் கம்ப்ரா என தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த மேலும் பல தகவலின் அடிப்படையில் மந்திதீப் பகுதியில் பதுங்கியிருந்த கம்ப்ராவை போலீசார் கைது செய்தனர்.
சாப்பாட்டில் தூக்க மாத்திரை
கைது செய்யப்பட்ட கம்ரப்ரா மேலும் கூறியதாவது, நீண்ட தூரத்தில் இருந்து வரும் ட்ரக் டிரைவர்கள் சாலையோர கடைகளில் சாப்பிடும்போது அவர்களுடன் நட்பாக பழகி அவர்களின் சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிடுவேன். டிரைவர்கள் தூங்கியதும் அவர்களின் ட்ரக்கை தனது கூட்டாளிகளுடன் கடத்திச்செல்வதும் முரண்டு பிடிக்கும் டிரைவர்களையும் அவர்களின் உதவியாளர்களையும் கொன்று உடலை காட்டில் வீசி விடுவேன் என்றும் கம்ப்ரா தெரிவித்துள்ளார்.
முதலில் மது கொடுத்து
பின்னர் ட்ரக் மற்றும் அதில் உள்ள சரக்குகளை பேசியபடி விற்றுவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆதேஷ் கம்ப்ரா தனது கைவரிசையை காட்டி வந்துள்ளார். முதலில் சாலையோரம் மது விற்று லாரி டிரைவர்களை மது கொடுத்து கவிழ்க்கும் வேலை செய்து வந்த ஆதேஷ் பின்னர் அவர்களை கொலை செய்யவும் துணிந்துவிட்டார் என்கிறது போலீஸ்.
கடனை அடைக்க கொலை
இதுபோன்ற ஒவ்வொரு கொலைக்கும் தனக்கு 50, 000 ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்றும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே இந்த பணியில் சேர்ந்ததாகவும் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்கு பெற்ற கடனை திருப்பி செலுத்த இதுபோன்ற பல குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 25, 000 ரூபாய் பணத்துக்காகவும் ஆதேஷ் பலரை கொலை செய்துள்ளார். ஆதேஷ் கம்ப்ராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.