"சார் விடுங்க.. செம குளிரு தூக்கம் வருது.." கோயிலில் திருட வந்த இடத்தில் படுத்து தூங்கிய திருடன்!
போபால்: மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் திருட வந்த இடத்தில் படுக்கையை பார்த்து குஷி அடைந்த திருடன் அங்கேயே படுத்து உறங்கிய காமெடி சம்பவம் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் லால்பாய்- புல்பி மாதா கோயில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அந்த கோவிலைத் திருடுவதற்காக நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் நேற்று இரவு அந்த கோயிலின் நடை சாத்திய பிறகு சுற்றுச்சுவர் வழியாக கோயிலில் எகிறி குதித்து உள்ளே நுழைந்தார்.
திருட நினைத்த திருடன்
அப்போது கோயிலின் பூட்டை உடைத்த அந்த திருடன் கோயிலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொள்ளாமல் அங்கு ஒரு படுக்கை இருந்ததை கண்டார். உடல் மிகவும் சோர்வாக இருந்ததால் அவர் அந்த படுக்கையில் படுத்துவிட்டு பின்னர் திருடலாம் என நினைத்துள்ளார்.
அசந்து தூங்கிய திருடன்
ஆனால் கடுங்குளிரால் அவரது போறாத வேளை, அசந்து தூங்கிவிட்டார். காலையில் வழக்கம் போல் கோயில் நிர்வாகி கோயிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மெதுவாக உள்ளே சென்று பார்த்தார்.
திருடன்
அப்போது படுக்கையில் அந்த திருடன் படுத்திருப்பதை கண்டார். உடனே வெளியே வந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போதும் அந்த திருடன் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டே இருந்தார்.
ஸ்டேஷனிலும் தூங்கி வழிந்த திருடன்
பின்னர் ஒரு குச்சியால் தட்டி அந்த திருடனை போலீஸார் எழுப்பினர். அப்போது திருடன் சார் பயங்கரமாக குளிர்கிறது. கொஞ்ச நேரம் தூங்க விடுங்கள் என்றாராம். இதனால் போலீஸார் எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி அந்த நபரை கவனித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
தெளிந்த பின்னர் விசாரணை
அங்கும் அந்த திருடன் தூக்கம் தெளியாமலேயே இருந்தார். தற்போது அந்த திருடனின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் போலீஸாருக்கு தெரியவில்லை. அவரது தூக்கம் தெளிந்த பிறகுதான் அவர் யார், பெயர் என்ன போன்ற விவரங்கள் தெரியவரும்.