உலுக்கும் சோகம்.. விழும் மரணங்கள்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் காஷ்மீர்.. பீதியில் மக்கள்
ஸ்ரீநகர்: கொரோனா ஒருபக்கம் என்றால், தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீர் நிலைகுலைந்து காணப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் வகையில் 3வயது பேரனின் கண் முன்னே தாத்தாவை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் சோப்பூர் நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் காரில் வந்த அவரது 3வயது பேரன் உயிர் பிழைத்தான். ரத்தம் சிதறிய தாத்தாவின் உடலின் அருகே சிறுவன் அமர்ந்து கதறி அழுத காட்சியுடன் கூடிய புகைப்படங்கள், காண்போரின் நெஞ்சை கனமாக்குகிறது.
ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரில் சிஆர்பிஎப் ரோந்து குழுவை குறிவைத்து தீவிராவதிகள் சரமாரியாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். அப்போது 3வயது பேரனுடன் அவரது தாத்தா ஸ்ரீநகரில் இருந்து ஹண்ட்வாராவுக்கு மாருதி காரில் சென்று கொண்டிருந்தார். தீவிரவாதிகள் அவர்கள் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதயமே வெடிக்கிறது.. சுட்டு கொல்லப்பட்ட தாத்தா.. உடம்பு மீது படுத்து எழுப்பும் 3 வயது பேரன்.. கொடுமை
சிஆர்பிஎப் வீரர் மரணம்
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முதியவர் அங்கேயே பலியானார். தன் கண் முன்னே தாத்தா பலியானதை பார்த அவரது 3வயது பேரன் கதறி அழுதபடி இருந்தான். இதையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து சிறுவனை காப்பாற்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், தீவிரவாதிகளுடன் கடும் சண்டை போட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் தப்பிஒடிவிட்டனர். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்தார். ஒரு முதியவர் உயிரிழந்தார். சுமார் ஐந்து வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பயந்து போன சிறுவன்
இந்நிலையில் குழந்தை தனது தாத்தாவின் ரத்தம் சிதறிய உடலின் அருகே உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. சிறுவனை காப்பாற்றிய காவல்துறையினர், பத்திரமாக அழைத்துச் சென்ற போது சிறுவன் மிகவும் பயந்து போய் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையை ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பிற்கு கொண்டு செல்லும் புகைப்படத்தை காஷ்மீர் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதல்
கடந்த வாரம், அனந்த்நாக் நகரில் சிஆர்பிஎஃப் மீது பயங்கரவாத தாக்குதலின் போது ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்டான். லிட்டில் நிஹான் பட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுவனை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்துப் பணியில் இருந்த போது தீவிரவாதி ஒருவர் பைக்கில் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
2 தீவிரவாதிகள் கொலை
குழந்தையின் கொலை பரவலான கோபத்தையும் கண்டனத்தையும் அப்போது எழுப்பியது. இதனிடையே அனந்த்நாக் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் தீவிரவாதி பாதுகாப்பு படையினருடனான மோதலுக்கு பின்னர் நேற்று தப்பினார். அவருடன் ஒரு கிராமத்தில் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
மக்கள் பீதி
தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில் அண்மைக் காலமாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் தீவிரவாதிகளின் அச்சுத்தல் காஷ்மீரை பீதிக்குள்ளாக்கி வருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வேண்டும் என்று அங்குள்ள மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.