நாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்
Recommended Video
அகர்தலா:திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிளாக பதிவு செய்தவர்கள் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லைப்பகுதியில் சிக்கிய ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் பிரச்னை எழுந்தது. அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.
அதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, 5 பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
திரிபுராவில் சிறைவைக்கப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளும் முன்னர் ஜம்மு & காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறிய 40,000 த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.
இந் நிலையில், திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளில் 27 பேர் அகதிகளாக ஐ.நா.விடம் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 4 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் ஐ.நா.விடம் பதியவில்லை என்றும் அகதிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் அகதிகளை துன்புறுத்தக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற சர்வதேச விதியை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.