மே.வங்கத்தில் வெடிகுண்டு வீசி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் படுகொலை... பாஜகவின் சதி என குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எங்களைத் தடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பாஜகவின் சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் முற்றிலும் இரண்டு டி.எம்.சி குழுக்களுக்கிடையேயான மோதலால் ஏற்பட்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்
மேற்கு வங்க மாநிலம் பாசிம் மெடினிபூர் மாவட்டம் நாராயங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்ராம்பூரில் சாலையோரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் உட்கார்ந்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்கள் 4 பேர் மீதும் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டை வீசியும் தப்பிச்சென்றனர்.
பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சவுக் டோலை பரிதாபாமாக உயிரிழந்தார். அருகில் இருந்த மற்ற 3 பெரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் சதி
இது தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பாசிம் மெடினிபூர் மாவட்டத் தலைவர் அஜித் மைதி கூறுகையில், முந்தைய தேர்தல்களில் நாங்கள் இப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டோம். சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எங்களைத் தடுக்க இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது. இது பாஜகவின் சதி. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறையிடம் கூறியுள்ளோம் என்று கூறினார்.
இரண்டு குழுக்களின் தகராறு
பாஜகவின் சமித் தாஸ் கூறுகையில், இந்த சம்பவம் முற்றிலும் இரண்டு டி.எம்.சி குழுக்களுக்கிடையேயான மோதலால் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக, அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இரு குழுவினரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போதே காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.