பலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்!
அகார்தலா: திரிபுராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ தன்மீது பலாத்கார புகார் கூறிய பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும் கூட்டணியில் உள்ளது.
ஆளும் கூட்டணியில் உள்ள திரிபுரா மக்கள் முன்னணி கட்சியின் ரைமா பள்ளத்தாக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தனஞ்ஜய். 28 வயதே ஆன இளம் எம்எல்ஏ ஆவர்.
தேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!
எம்எல்ஏ ஏமாற்றி விட்டார்
இவர் மீது கடந்த 20ஆம் தேதி அகார்தலா மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் எம்எல்ஏ தனஞ்ஜய் தன்னை பலாத்காரம் செய்து விட்டார் என்றும் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கூறியிருந்தார்.
தனஞ்ஜய் மீது வழக்குப்பதிவு
இந்த விவகாரம் திரிபுராவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து அகார்தலா போலீசார் எம்எல்ஏ தனஞ்ஜய் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சமாதான முடிவு
அந்த மனுவை கடந்த ஒன்றாம் தேதி விசாரித்த திரிபுரா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முடிவுக்கு வந்தனர்.
புகார் கூறிய பெண்ணுடன் திருமணம்
இந்நிலையில் அகார்தலாவில் உள்ள சத்துர்தாஸ் தேவதா கோவிலில் எம்எல்ஏ தன் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்துக்கொண்டார். இதனை எம்எல்ஏ தனஞ்ஜய் செய்தியாளர்களிடமும் அறிவித்தார்.
போலீஸ்க்கு போக மாட்டார்கள்
இதுதொடர்பாக பேசிய எம்எல்ஏவின் வழக்கறிஞர் அமித் தெப்பர்மா, இருதரப்பினரும் சமாதான பேச்சுக்கு முன்வந்ததால் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும் இனி ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளிக்க மாட்டர்கள் என்றும் அவர் கூறினார்.
வேறு வழியில்லாமல் திருமணம்
தற்போது மணப்பெண் தலாய் மாவட்டத்தில் உள்ள கண்டசெரா பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இன்று திருமணத்தை பதிவு செய்து அதற்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எம்எல்ஏ புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.