ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்!
அலிகார்: பத்தாயிரம் ரூபாய் கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் அவரது இரண்டரை வயது மகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு உடல் துண்டு துண்டாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதவர்களை கடன் கொடுத்தவர்கள் அவதூறாக பேசுவதும், அடிதடி வரை போவதும் வாடிக்கைதான். பேச்சை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் தற்கொலை முடிவை எடுப்பதையும் செய்தியாக பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில் பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பிக்கொடுக்காத நபரின் இரண்டரை வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் சிலர் கொடூரர்கள். சர்ச்சைக்கு பெயர் போன உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை மாயம் - புகார்
உத்தரப்பிரதேச மாநிலம் டப்பல் நகரை சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த மே மாதம் 31ஆம் தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
மூட்டையை மோப்பமிட்ட நாய்கள்
போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி மாயமான நாளில் இருந்து 3வது நாள் அதாவது ஜூன் 2ஆம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே தெருநாய்கள் கூட்டமாக நின்று அங்கிருந்த மூட்டையை மோப்பமிட்டுக் கொண்டிருந்தன.
மூட்டையை பிரித்த போலீஸ்
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தனர்.
குழந்தையின் உடல் பாகங்கள்
அதில் மனித உடலின் பாகங்கள் இருப்பதை அறிந்து அதிர்ந்த போலீசார், முழுவதுமாக பிரித்து பார்த்தபோது, அது மாயமான இரண்டரை வயது குழந்தையின் உடல் என்பது உறுதியானது. இதையடுத்து குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர் போலீசார்.
இரண்டு பேர் கொலை
அதில் குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதும், பின்னர் குழந்தையின் உடல் துண்டு துண்டாய் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் இதுதொடர்பாக ஜாகீத், அஸ்லாம் என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
பத்தாயிரம் ரூபாய் கடன்
விசாரணையில் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்ற குழந்தையின் தந்தை அதனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் கைதாகியுள்ள இரண்டு பேரின் குடும்பத்தினரும் கொலைக்கு உடந்தை எனக்கூறியுள்ள குழந்தையின் தந்தை குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம்
நாளைக்குள் அவர்களை கைது செய்யாவிட்டால் நாளை முதல் சாகும் வரை அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். பத்தாயிரம் ரூபாய் பணத்திற்காக இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் குவிப்பு
மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டப்பல் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் குல்ஹரி தெரிவித்துள்ளார்.