மர்மமாக இறந்த இளைஞர்.. சந்தேகத்தில் பெண்ணை அடித்து உதைத்து நிர்வாண ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்
பீகாரில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து பெண் ஒருவரை அடித்து உதைத்த கிராமமக்கள் அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்
போஜ்பூர்: பீகாரில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து பெண் ஒருவரை அடித்து உதைத்த கிராமமக்கள் அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலல் போஜ்பூர் மாவட்டத்தில் பியா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே இளைஞரின் உடல் ஒன்று கிடந்துள்ளது.
திரண்ட கிராம மக்கள்
அதனை கைப்பற்றிய போலீசார் விசாரித்ததில் அந்த இளைஞர் 19 வயதான விமலேஷ் ஷா என தெரியவந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஷாவின் சொந்த கிராமம் ஆன தாமோதர்பூர் பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர்.
சிவப்பு விளக்கு பகுதி
அவர்களில் சிலர், அருகிலுள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வசிப்பவர்கள் இளைஞரை அடித்து கொன்றிருக்க கூடும் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற கிராம மக்கள், அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
ரயிலுக்கு தீ
கண்ணில் பட்டதையெல்லாம் சூறையாடிய அந்த கும்பல், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் அந்த வழியாக சென்ற ரயிலின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
பெண்ணை நிர்வாணமாக்கி
பின் ஒரு பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து தெருவுக்கு கொண்டு வந்த அவர்கள் அந்த பெண்ணை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
நிர்வாண ஊர்வலம்
அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், பெண்ணை அடித்தவாறே நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த வெறிபிடித்த கும்பலை கலைந்து போக செய்ய வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பெரும் பரபரப்பு
தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தினை தணிக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சந்தேகத்தால் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தெரு தெருவாக இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.