பல பெண்களுடன் தொடர்பு.. அழகை கெடுக்க கூலிப்படையை ஏவி கணவரின் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி.. கணவன் பலி
கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் முகத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் முகத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர். 32 வயதான இவருக்கு 29 வயதில் சுபைதா என்ற மனைவி உள்ளார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், கையில் வைத்திருந்த ஆசிட்டை பஷீரின் முகத்தில் வீசினார்.
முகம் சிதைந்து கோரமானது
இதில் வலி தாங்க முடியாமல் பஷீர் அலறி சத்தம்போட்டார். சிறிது நேரத்தில் அவரது முகம் சிதைந்து கோரமானது. அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும், மர்ம நபர் தப்பியோடினார்.
மருத்துவமனையில் சிகிச்சை
மனைவி சுபைதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
யார் என்று தெரியாது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஷீரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது தான் வீட்டில் தூங்கியபோது மர்ம நபர் ஆசிட் வீசிச்சென்றார் என்றும் அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
மனைவி பக்கம் திரும்பிய சந்தேகம்
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து பல கட்ட விசாரணைக்கு பின்னர் பஷீரின் மனைவி சுபைதா மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது.
பல பெண்களுடன் தொடர்பு
இதனையடுத்து போலீசார் சுபைதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபைதா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அதனை கைவிடுமாறு கூறியும் கணவர் கேட்கவில்லை.
ஆசிட் வீசினால்
பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட காரணம் அவரது முக அழகுதான் என்ற சுபைதா, அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்த பெண்ணும் தனது கணவரை பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து அவரது முகத்தில் ஆசிட் வீச திட்டமிட்டுள்ளார்.
கொலை செய்வது நோக்கமல்ல
இதற்காக தனக்கு தெரிந்த நபரை கூலிக்கு வைத்து கணவரின் முகத்தில் ஆசிட் வீச செய்துள்ளார். கணவரின் தவறான நடத்தைக்கு பாடம் புகட்டவே அவ்வாறு செய்ததாக கூறிய சுபைதா, கணவரை கொலை செய்ய வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றார்.
அதிர்ச்சி சம்பவம்
இதனையடுத்து போலீசார் சுபைதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிட் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கணவருக்கு பாடம் புகட்ட முயன்று அது கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.