ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியவில்லை.. உணவு பொருள் கிடைக்காமல் பட்டினியில் பெண் மரணம்
ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பசியில் மரணம் அடைந்து இருக்கிறார்.
அலஹாபாத்: ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகினா ஆஸ்பாக் என்ற பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இவர் பல முறை கெஞ்சியும் எந்த உணவு பொருளும் வழங்கப்படவில்லை.
கடைசி வரை இவருக்கு ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் இணைப்பது எப்படி என்று தெரியாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் பசியில் மரணம் அடைந்து இருக்கிறார்.
இவரது மரணத்தை அடுத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். இவருக்கு ரேஷன் ஊழியர்கள் செய்த கொடுமைகள் குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் உருக்கமாக பேசி இருக்கின்றனர்.
ஆதார் கார்டை இணைக்க முடியவில்லை
ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவால் உத்தரபிரதேசத்தில் பலருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் ஷகினா ஆஸ்பாக் என்ற பெண் கடத்த ஒரு மாதமாக ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் இணைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவரது உடல் நிலை சரி இல்லாத காரணத்தை கூறியும் அவர்களுக்கு சென்ற மாதத்திற்கான உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது.
ஊழியர் காலில் விழுந்தனர்
இதையடுத்து ஷகினா ஆஸ்பாக் கணவர் முகமது ஆஸ்பாக் ரேஷன் ஊழியர்களிடம் சென்று ஷாகினாவின் நிலைமையை கூறி அழுது இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அங்கு இருந்து எல்லா ஊழியர்களின் காலிலும் அவர் விழுந்து கெஞ்சி இருக்கிறார். ஆனால் ஆதார் கார்டை இணைத்தால் மட்டுமே ரேஷன் தருவோம் என ஊழியர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டனர்.
5 நாட்களாக பட்டினி
ரேஷன் பொருட்கள் இல்லாததால் அந்த குடும்பம் உணவு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறது. ஷகினா ஆஸ்பாக் இதன் காரணமாக தொடர்ந்து ஐந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்கிறார். வெறும் தண்ணியை மட்டுமே அவர் குடித்து வந்ததாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். மேலும் அவருக்கு இதன் காரணமாக திடீர் என்று உடல் நல குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஆகிவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.
விசாரணை தொடங்கியது
இதையடுத்து அவர் நேற்று மாலை கொடுமையான பசி தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இந்தப் பிரச்சனை குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களும் இன்னும் சாப்பிடாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.