சாமியார் ராம்பால் ஆசிரம வன்முறையில் சிக்கிய 2 பேர் பலி- சிகிச்சை பெற்ற தாய்-மகள் உயிரிழப்பு!!
ஹிசார்: சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் அவரது ஆயுதம் தாங்கிய குண்டர் படைக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் சிக்கியோரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹரியானாவில் நீதிமன்ற உத்தரவுப்படி சாமியார் ராம்பாலை கைது செய்ய போலீசார் நேற்று முயற்சித்தனர். ஆனால் சாமியாரின் சீடர்கள் என்கிற ஆயும் தாங்கிய குண்டர்படை போலீசார் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.
துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் வன்முறையாட்டம் போட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். போலீசாரும் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என முயற்சித்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆசிரமத்தின் ஒரு பகுதியை இடித்து உள்ளே நுழைந்து ராம்பாலை போலீசார் தேடினர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்த வன்முறையில் சிக்கி படுகாயமடைந்த தாய் மற்றும் 5 வயது மகள் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஹிசார் வன்முறையில் பலி எண்ணிக்கை 2 ஆகியுள்ளது.