ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலை என்ன.. அங்குள்ள மக்கள் கருத்து என்ன.. பெண் நிருபர் சொல்லும் புது தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நாம் நினைப்பது போல இல்லை.. அது தனித் தீவாக மாறியுள்ளது என்பதுதான் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு திரும்பும் பத்திரிக்கையாளர்கள் சொல்லக் கூடிய செய்தியாக உள்ளது.
நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தகவல் தொடர்பு என்பது அங்கு துண்டிக்கப்பட்டுள்ளது. வெறும் இணையதள சேவை மட்டுமின்றி, தொலைபேசி சேவையும் கிடைக்காததால், திருமணம் உள்ளிட்ட தகவல்களை கூட லோக்கல் கேபிள் டிவி சேனல்கள் வழியாக சொல்லும் நிலைதான் அங்கே உள்ளது.
காஷ்மீரில் இணையதள சேவை மற்றும் தொலைபேசி சேவை இல்லாததால், நாளிதழுக்கு செய்தி கூட அனுப்ப முடியவில்லை என்று, அங்கேயுள்ள முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தியாளர் பகிர்ந்த தகவல் சில தினங்கள் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
1990களில் கூட இவ்வளவு மோசம் இல்லை.. இன்று காஷ்மீர் நிலைமை தெரியுமா.. குமுறும் பத்திரிக்கையாளர்கள்
|
காஷ்மீர் நிலைமை
இந்தநிலையில் மற்றொரு பெண் பத்திரிக்கையாளர், காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த விவரங்களை நீங்களே பாருங்கள்: நான் ஸ்ரீநகரில் பார்த்த மற்றும் கேட்டதை ட்வீட் செய்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ள பத்திரிக்கையாளர் விஜைதா சிங், தன்னிடம் காஷ்மீர் மக்கள் சிலர் கூறியதாக கூறி சொல்லியுள்ள வார்த்தைகள் இவைதான்:
|
மக்கள் சொல்கிறார்களாம்
அவர்கள் (மத்திய அரசு) நாட்டின் பிற பகுதிகளில் பெண்களைப் பாதுகாக்க முடியவில்லை, எங்களைப் பாதுகாக்க விரும்புகிறார்களா?, அவர்கள் வறுமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வீடு உள்ளது. இந்த நடவடிக்கையின் நன்மைகள் பற்றி தெரியவில்லை, ஆனால் அது செய்யப்பட்ட விதம் தவறானது. நீங்கள் தலைவர்களை சிறையில் அடைக்கிறீர்கள், தகவல்தொடர்புகளை துண்டிக்கிறீர்கள், யாரையும் கலந்தாலோசிக்காமல் இதையெல்லாம் செய்துவிட்டு எங்கள் நன்மைக்காக என்று கூறுகிறீர்களா?. இவ்வாறு காஷ்மீரில் சிலர் தன்னிடம் கூறியதாக விஜைதா சிங் ட்வீட் செய்துள்ளார்.
|
ஆதரவு குறைவு?
விஜைதா சிங் தனது ட்வீட்டில் மேலும் கூறியுள்ளதாவது: ஒரு நபரைத் தவிர, 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான அரசின் முடிவை ஆதரித்த எவரையும் நான் சந்திக்கவில்லை. ஒரு நபர் என்னிடம் கூறினார்: "நாங்கள் பெரும் ரத்தக்களரியைக் கண்டவர்கள். அதை மீண்டும் விரும்பவில்லை. ஆனால் இதை இளைய தலைமுறையினருக்கு நீங்கள் எவ்வாறு விளக்குகிறீர்கள் ? "
|
நகரம் இப்படி
இந்த உரையாடல்கள் ஸ்ரீநகர் நகரத்தில் நான் சந்தித்தவர்கள் சொன்னவை. பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஸ்ரீநகரில் நகரப் பகுதி பாதுகாப்பால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் எங்கள் நிருபரை கூட என்னால் உடனே தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்செயலாகத்தான் நேற்று அவரை சந்திக்க முடிந்தது.
|
செய்தி சேனல்களுக்கு தடை
உள்ளூர் கேபிள் நெட்வொர்க்கில் உள்ள மியூசிக் சேனல்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படுகின்றன, அம்மாநில செய்தி சேனல் ஒளிபரப்பு தடுக்கப்பட்டுள்ளன. டெல்லியை சேர்ந்த செய்தி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன, அவைதான் காஷ்மீர் மக்கள் செய்திகளை அறியும் ஒரே வழியாக உள்ளது. டெல்லி செய்தி சேனல்கள் சரியான கள நிலவரத்தை காட்டவில்லை என்று மக்கள் கூறினர். உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் எடுக்கும் போட்டோ, வீடியோக்களை டெலிட் செய்ய பாதுகாப்புப் படையினர் கட்டாயப்படுத்துகிறார்கள்.
|
வாகன போக்குவரத்து
டீசல் இங்கு எளிதாக கிடைக்கிறது. எனவே பெரிய டாக்சிகள் இயங்குகின்றன. பெரும்பாலான தனியார் சிறிய கார்கள் பெட்ரோலில் இயங்குகிறது. ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு சில மணிநேரங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விற்கப்படுகிறது. பொது போக்குவரத்து மிக குறைவாக உள்ளது. அதிர்ஷ்டசாலி மக்கள் என்றால் வாகனங்கள் கிடைத்து, சக பயணிகளுடன் பயணிக்க முடியும்.
|
மாதிரி பாஸ்
ஸ்ரீநகர் நகரில் வசிப்பவர்களுக்கான மாதிரி பாஸ் இது. எல்லோரும் இந்த "ஊரடங்கு உத்தரவு" பாஸைப் பெற முடியாது. 1 வது படம்- மாதிரி 144 தடை உத்தரவுக்கான பாஸ். 2 வது படம்- DM அலுவலகத்திற்கு வெளியே "ஊரடங்கு உத்தரவு" பிறப்பிக்கப்படவில்லை என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
|
டிவியில் திருமண அறிவிப்பு
ஸ்ரீநகரில் உள்ள ஒரு உள்ளூர் மியூசிக் சேனலில் சசி கபூரின் பாடல் இசைக்கிறது, அப்போது திருமண விழாக்களை ரத்து செய்வதாக அறிவிக்கும் ஸ்க்ரோல் திரையில் ஓடியது. இணையம் மற்றும் தொலைதொடர்பு இணைப்பு இல்லாததால், விருந்துக்கு வர வேண்டாம் என்று உறவினர்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்த பெண் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
|
மறுப்போர் உண்டு
அதேநேரம் சில நெட்டிசன்கள் இந்த தகவலை மறுக்கிறார்கள். காஷ்மீரில் வெளியாகும் செய்தித்தாள்களை காட்டி, டெல்லி செய்தி சேனல்கள் தவிர வேறு செய்தி ஊடகம் இயங்கவில்லை என கூறுவது தவறான தகவல் என்கிறார்கள். அதேபோல தெருக்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி சில படங்களையும் ஷேர் செய்துள்ளனர்.