"புதிய பறவை" பாணியில் சரோஜா தேவி போல் பின்னி பெடலெடுத்த எஸ் ஐ மாதவி.. "காதல்" வலையில் சிக்கிய ரவுடி
போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடியை காதலிப்பது போல் நடித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரை சேர்ந்தவர் பாலகிஷண் சவுபே. இவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் ஏராளமான உள்ளன. இவர் தேடப்படும் குற்றவாளியாகவும் இருக்கிறார்.
மத்திய பிரதேசம் மட்டுமல்லாமல் இவர் உத்தரப்பிரதேசத்திலும் வழக்குகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் கொள்ளையடித்து விட்டு உத்தரப்பிரதேசத்தில் போய் பதுங்குவதே இவரது வாடிக்கை. அது போல் உ.பி.யில் கொள்ளையடித்தால் ம.பி.யில் வந்து ஒளிவார்.
களமிறக்கிய போலீஸ்
இதனால் அவரை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். அவரை பிடிக்க ரூ 10 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாருக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதன்படி பெண் எஸ்ஐ ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டது.
கொஞ்சம் வீக்
அந்த பெண் எஸ்ஐ பெயர் மாதவி அக்னிஹோத்ரி (28). இவர் விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்தார். ரவுடியின் பழக்க வழக்கங்களை கண்காணித்தார் மாதவி. பின்னர் ரவுடி பெண்கள் விவகாரத்தில் கொஞ்சம் வீக் என்பதை கண்டுபிடித்தார்.
ரவுடியின் போன் நம்பர்
ரவுடிக்கு பேஸ்புக்கில் கேர்ள் பிரெண்டுகள் ஜாஸ்தி என்பதும் அறியவந்தது. இதையடுத்து ரவுடியின் பேஸ்புக்கில் மாதவி பிரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்தார். அதில் தன்னை ராதா என அடையாளம் காட்டினார். பின்னர் ரவுடியின் போன் நம்பரை வாங்கி தொடர்ந்து பேசி வந்தார் மாதவி.
திருமணம் செய்ய
இதனால் மாதவியின் காதல் வலையில் ரவுடி விழுந்தார். பின்னர் மாதவியை திருமணம் செய்ய விரும்புவதாக ரவுடி கூறியுள்ளார். இதற்காக மாதவியும் ஒப்புக் கொண்டு உ.பி- ம.பி. எல்லையில் சிறிய கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வர அழைத்தார் மாதவி. அங்கு காவலர்கள் சிலர் மாதவியின் உறவினர்கள் போல் வேடமிட்டிருந்தனர்.
துப்பாக்கியுடன் மணப்பெண்
ரவுடியை கைது செய்ய துப்பாக்கியுடன் மணப்பெண் கோலத்தில் சென்றார் மாதவி. அப்போது சுற்றியிருந்த போலீஸார் உதவியுடன் ரவுடியை கைது செய்தனர். இதை பார்க்கும் போது புதிய பறவை படத்தில் சவுகார் ஜானகியை கொலை செய்த சிவாஜியை கைது செய்ய போலீஸான சரோஜா தேவி, சிவாஜியை காதல் வயப்பட வைத்து கைது செய்ய வைப்பதை போல் உள்ளது இந்த மாதவியின் கதை.