சினிமா பாணியில் வித்தியாசமான முறையில் பெண் தோழியிடம் மன்னிப்பு கேட்ட தொழிலதிபர்
புனே: மகாராஷ்டிராவை சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் நிலேஷ் கெடேகர் தனது பெண் தோழியிடம் சண்டை போட்டதற்காக வித்தியாசமான முறையில் மன்னிப்பு கேட்டதற்காக பிரபலமாகியிருகிறார்.
நீங்கள் உங்கள் தோழியிடம் சண்டை போட்டால் எப்படி மன்னிப்பு கேட்பீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்பீர்களோ அது தெரியாது. ஆனால், மகாராஷ்டிராவில் ஒரு இளம் தொழிலதிபர் அனைவரும் வியக்கும்படியான முறையில் சினிமா பானியில் தன் பெண் தோழியிடம் மன்னிப்பு கேட்டு பிரபலமாகியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் 25 வயதுதொழிலதிபர் நிலேஷ் கெடேகர். இவர் ஏதோ ஒரு விஷயத்திற்காக தன்னுடைய பெண் தோழியிடம் சண்டைபோட்டுள்ளார். பின்னர், தனது தவறை உணர்ந்த நிலேஷ் தனது தோழியிடம் மன்னிப்பு கேட்க விரும்பியுள்ளார். அப்படி மன்னிப்பு கேட்பது வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
அதற்காக தனது நண்பரான விலாஸ் ஷிண்டேவின் உதவியுடன் மன்னிப்பு கேட்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அந்த திட்டத்தின்படி, ஒரு சிறிய பேனர் பலகை ஒன்றில் தனது பெண் தோழியின் பெயரான ஷிவ்டேவுடன் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதன் முடிவில் 2 ஆச்சரிய குறிகளும், தொடர்ந்து சிவப்பு நிறத்தில் இதயம் ஒன்றும் உள்ளது.
இதுபோன்று 300 பேனர்களில் எழுதப்பட்டு அவை புனே நகரின் அருகே பிம்ப்ரி சிஞ்சுவாட் பகுதியில் பரபரப்பு நிறைந்த சாலையின் நடுவே அமைந்த தடுப்பு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.
நிலேஷ் ஏன் இந்த பகுதியில் பேனர் வைத்தார் என்று கேட்கிறீர்களா? அவருடைய பெண் தோழி மும்பையில் இருந்து இரவில் புறப்பட்டு காலையில் அந்த பகுதி வழியாகத்தான் வருவாராம். அதனால், அந்த பேனர்களில் ஒன்றையாவது காண கூடும் என்ற நோக்கத்தில் நிலேஷ் திட்டமிட்டு செய்துள்ளார்.
இந்த பேனர் விவகாரம் பற்றி அறிந்த போலீசார் ஷிண்டேவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் மூலமாக நிலேஷையும் போலீசார் விசாரித்தனர். சட்டவிரோத முறையில் பேனர் வைத்ததற்காக மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக இவர்கள் மீது பிம்ப்ரி நகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
இப்படி பெண் தோழியை சமாதானப்படுத்த முயற்சி செய்த தொழிலதிபர் இப்போது இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.