இவரும் ஒரு மனிதரா.. கேரளாவில் உதவி கேட்டவரை மீட்க சென்ற பாதுகாப்பு வீரர்களுக்கு காத்திருந்த ஷாக்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிக்கு சென்ற ராணுவத்தினருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. மனிதாபிமானமற்ற செயல் என்றும் அதை கூற முடியும்.
கேரளாவில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஒவ்வொரு ஊரும் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டு தனித்தனித் தீவுகள் ஆகிவிட்டன.
இதனால் மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகள் இல்லை.
|
ராணுவம் மீட்பு
இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக வீட்டின் மொட்டை மாடியில் நிற்பவர்களை பத்திரமாக ஏற்றி சென்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
மோசமான சம்பவம்
ராணுவத்தினர் தங்கள் உயிரை துச்சமாக மதித்து இந்த சேவையை செய்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். சில பெண்கள் மொட்டை மாடியில் தேங்க்யூ என்று பெரிய எழுத்துக்களால் கோலமிட்டு தங்கள் நன்றியை ராணுவத்தினருக்கு தெரிவித்தனர். இப்படியாக நெகிழ்ச்சி தருணங்கள் நிகழ்ந்த கேரளத்தில்தான் இன்னொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.
உதவி கேட்டார்
இதுகுறித்து மீட்பு படையை சேர்ந்த ஒருவர் மலையாள டிவி சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோ, வைரலாக பரவி வருகிறது. அந்த படை வீரர் கூறியது இதுதான்: நாங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சிவப்பு வண்ணத்தில் சட்டை அணிந்திருந்த ஒரு இளைஞர் அதை கழற்றி அங்குமிங்குமாக அசைத்தார். மொட்டை மாடியில் நின்ற அவரை பார்த்ததும் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று நினைத்து கடினமான பகுதி என்றபோதிலும், ஹெலிகாப்டரை கீழே இறக்கி அருகே கொண்டு சென்றோம்.
செல்பி எடுத்தாராம்
ஆனால் ஹெலிகாப்டர் அருகே வந்ததும் தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து ஹெலிகாப்டர் பின்னணியில் தன்னை செல்பி படம் எடுத்துக் கொண்டார். இதன் பிறகு, நீங்கள் சென்று விடலாம் என்று எங்களை நோக்கி டாட்டா காண்பித்து, அனுப்பி வைத்தார். இது போன்ற செயல்கள் தவறானது என்று அந்த பாதுகாப்பு வீரர் தெரிவிக்கிறார்.
உதவி கேட்போருக்கும் கிடைக்காது
இது போன்ற விஷமத்தனமான செயல்களால் உண்மையிலேயே உதவி கேட்போருக்கும் உதவி கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதை இதுபோன்ற மர மண்டையர்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ?