அனாதைகளான குழந்தைகள்... சேர்த்து வைத்த ஆதார் அட்டை... பெங்களூருவில் நெகிழ்ச்சி
தொலைந்துபோன பெற்றோரை 3 குழந்தைகள் ஆதார் அட்டை மூலம் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு: பெற்றோரை தொலைத்த 3 குழந்தைகளுக்கு மீண்டும் அவர்களை மீட்டுக் கொடுத்துள்ளது மத்திய அரசின் ஆதார் அட்டை. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பெங்களூரு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் பெற்றோர்களை பல்வேறு காரணங்களால் பிரிந்து தவித்த மூளைத் திறன் குறைந்த குழந்தைகள் 3 பேர் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் முழு வரலாறு தெரியாமலேயே அவர்கள் அங்கு வளர்ந்தனர்.
அந்த மூன்று குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியது. இன்னும் சொல்லப் போனால் நேற்றுதான் அவர்களின் பொன்னாள்.
மூவருமே அறிவுத் திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் உடைய குழந்தைகள் என்பதால் அவர்களைப் பற்றிய உண்மைகள் அறிவதில் சிக்கல் இருந்தது. ஆனாலும் பொறுமையோடு காப்பக அதிகாரிகள் அவர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.
ஓசூர் சாலை காப்பகம்
மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட இவர்கள் மூவரும் ஓசூர் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உறவினர்கள் யாரும் அவர்களை காண வராததால் அதிகாரிகளும் குழப்பத்தில் இருந்தனர்.
காணாமல் போனவர்கள்
மோனு, ஓம்பிரகாஷ், மற்றும் நீலகண்டா எனும் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு விதமான காரணங்களுக்காக பிரிந்தவர்கள். அல்லது பிரிய வைக்கப்பட்டவர்கள்.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை
இவர்கள் தங்கி இருந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில், அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. அதில் நிகழ்ந்த விஷயங்கள் உண்மையிலேயே ஆச்சரியமானவை.
ஆதார் பதிவு நிராகரிப்பு
ஆதார் பதிவின்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிகள் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போயுள்ளன. அதனால் ஏற்கெனவே ஆதார் அட்டை எடுக்கப்பட்டதாகக் கூறி இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது.
முகவரிகள் ஆய்வு
ஆனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை, காப்பக அதிகாரிகள் ஆராய்ந்தனர். அதில், அங்கிருந்த நபர்கள் தங்களது குழந்தைகள் காணாமல் போய் ஆண்டுக் கணக்கில் ஆகிறது. அவர்களை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெற்றோரும் குழந்தைகளும் ஒன்று சேர்ந்தனர்
அதன் பிறகு, அந்த மூன்று பேரும், அவர்களது பயோமெட்ரிகள் ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு பெற்றோர்-குழந்தைகளை வாரி அணைத்து உச்சிமோந்து கட்டிக் கொண்டனர்.