வெறும் ரூ.2500.. உலகில் எங்கிருந்தும் ஆதார் விவரத்தை திருடலாம்.. அதிர வைக்கும் சாப்ட்வேர் மோசடி!
ஆதார் தகவல்களை வெறும் 2500 ரூபாய் சாப்ட்வேர் வைத்து பலர் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: ஆதார் தகவல்களை வெறும் 2500 ரூபாய் சாப்ட்வேர் வைத்து பலர் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஹஃப்போஸ்ட் என்று பிரபல செய்தி நிறுவனம் இந்த மோசடியை கண்டுபிடித்து உள்ளது. இது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் எளிதாக, வெறும் 2500 ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமாலும், யாருடைய ஆதார் கணக்கு விவரங்களை வேண்டுமானாலும் திருடலாம். உங்களது கை ரேகை வரை இதை வைத்து எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
என்ன சாப்ட்வேர்?
இணையத்தில் நிறைய ''சாப்ட்வேர் பேட்ச்'' கிடைக்கும். சாப்ட்வேர் பேட்ச் என்பதை பயன்படுத்தி எதாவது ஒரு இணைய பக்கம், அப்ளிகேஷன்களில் நாம் விரும்பிய மாற்றத்தை அனுமதியோடும் அனுமதி இல்லாமலும் செய்ய முடியும். இந்த நிலையில்தான் ஆதார் அமைப்பான ''யுஐடிஏஐ'' அமைப்பின் பக்கத்தில் இருந்து தகவலை திருட சாப்ட்வேர் பேட்ச் ஒன்று இந்தியாவின் பெரு நகரங்களில் விற்கப்பட்டு இருக்கிறது.
வழி 1
இந்த சாப்ட்வேர் மூலம் மூன்று விதமான செயல்களை செய்ய முடியும். முதலாவதாக இதன் மூலம் மக்கள் ஆதாரில் கொடுத்து இருக்கும், பயோமெட்ரிக் விவரங்களை திருட முடியும். அதாவது உங்களுடைய ரத்த குரூப், கைரேகை, கண் ரெட்டினா அடையாளம், உங்கள் குடும்பத்தினரின் கைரேகை விவரங்களை எடுக்க முடியும்.
வழி 2
யுஐடிஏஐ பக்கத்தில் நம்முடைய ஆதார் விவரம் அளிக்கப்பட்ட இடத்தின் ஜிபிஎஸ் விவரங்கள் இருக்கும். இந்த விவரங்களை எளிதாக யார் வேண்டுமானாலும் எடுக்க முடியும். அதாவது உங்களுக்கு பிடிக்காதவர், உங்கள் எதிரி, ஏன் ஒரு தீவிரவாதி கூட உங்கள் ஆதார் விவரங்களை வைத்து நீங்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அதேபோல் இந்த விலாசத்தில் வசிப்பதாக கூறி உங்கள் பெயரில் தீவிரவாதி கூட ஆதார் அட்டையை உருவாக்க முடியும்.
வழி 3
கடைசியாக நீங்கள் இந்த ஆதாருடன் இணைத்து இருக்கும் எல்லா இணைப்புகளின் விவரங்களையும் திருட முடியும். அதவாது பாஸ்போர்ட்டை இணைத்து இருந்தால் அதை திருட முடியும். வங்கி கணக்கை இணைத்து இருந்தால் அதன் விவரத்தை திருட முடியும். உங்கள் கிரெடிட் கார்ட் விவரத்தை உங்களுக்கே தெரியாமல் திருட முடியும்.
வெறும் 2500 ரூபாய்
இதை எல்லாம் வெறும் 2500 ரூபாய்க்கு செய்ய முடியும் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஆம், இதில் ஒருமுறை 2500 ரூபாய் கொடுத்து வாங்கினால் போதும் எத்தனை பேரின் ஆதார் விவரங்களையும் எளிதாக திருட முடியும். வாழ்நாள் முழுக்க இதனால் எளிதாக விவரங்களை திருட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலர் செய்துள்ளனர்
இதை ஏற்கனவே இந்தியாவில் பலர் வாங்கி இருக்கிறார்கள் என்று இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆதார் பதிவேற்றும் ஒப்பந்ததாரர்கள் இதை அதிகம் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் யாருடைய தகவல் யாரிடம் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
யார் வேண்டுமானாலும்
முக்கியமாக, இதை உலகில் யார் வேண்டுமானாலும் இணையம் மூலம் வாங்க முடியும். இந்த சாப்ட்வேர் பேட்ச் இணையத்தில் இப்போதும் கிடைக்கிறது. அமெரிக்கா, பாகிஸ்தான்,சீனா எங்கோ இருக்கும் தீவிரவாதி கூட இந்த விவரங்களை எளிதாக உங்களுக்கே தெரியாமல் எடுக்க முடியும்.
இதற்கு முன்பு
இதேபோல் 'தி டிரிபியூன்' என்று ஆங்கில பத்திரிக்கைதான் இந்த ஸ்டிங் ஆப்ரேஷனை நடத்தி இருக்கிறது. பஞ்சாப்பில் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று எந்த ஆதார் விவரம் கேட்டாலும் கொடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவின் அட்மீன் அணில் குமாரிடம் 'பேடிஎம்' மூலம் 500 ரூபாய் கொடுத்தால் போதும் நாம் கேட்கும் ஆதார் விபரத்தை அவரே எடுத்து கொடுத்துவிடுவார். இதற்கு 10 நிமிடத்திற்கு மேல் ஆகாது என்றும் கூறி, செய்தும் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.