அடுத்ததா ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமாம்
ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : ரேஷன் கார்டு, பான் கார்டுகளைத் தொடர்ந்து வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு என அனைத்தையும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. அதே போன்று வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லோக் சபாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விரைவில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கூறினார். ஆதார் கார்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு உரிய நேரத்தில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை இணைப்பு குறித்து தேர்தல் கமிஷன் அறிவிக்க இருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
எதற்கெடுத்தாலும் ஆதார் கார்டை கேட்பதும், ஆதார் கார்டுடன் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய கார்டுகளை இணைப்பதும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்பு மேலும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.