மானிய சிலிண்டர் பெற இனி ஆதார் அட்டை அவசியமில்லை: வீரப்ப மொய்லி
சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால், நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியத்தை பெற முடியாது என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது.
இதனால் பயனாளிகளிடையே கடும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டது. ஏனெனில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இன்னும் ஆதார் அட்டை பெறாத லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆதார் திட்டம் மூலமான மானியத் திட்டம் திறம்பட அமலாக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் மொய்லி கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.