இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயம் அல்ல: மத்திய அரசு விளக்கம்!
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என வெளியான செய்தி தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம், ரேஷன் பொருட்கள் பெற, முதியோர் உதவித் தொகை என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியாயின. மாணவர்களின் மதிய உணவு திட்டத்துக்கும் ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இறப்பை பதிவு செய்ய அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என செய்தி வெளியானது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இறந்தவருக்கு ஆதார் எண் இருந்தால் அந்த எண்ணை உறவினர்கள் இறப்பு சான்றிதழில் பதிவு செய்யலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அடையாள சான்றுகளை கொடுப்பதற்கு பதில் ஆதார் எண்ணை கொடுக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என அதில் குறிப்பிடவில்லை. மேலும் இந்த முறை ஜம்மு காஷ்மீர், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.