ஆதார் இருந்தால் திருப்பதி ஏழுமலையானை ஈஸியா 1 மணிநேரத்தில் பார்க்கலாம் ...
ஆதார் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video
திருமலை: திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் ஆதார் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் வரப்பிரசாதி. ஏழுமலையானை தரிசனம் செய்தார் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்காரணமாகவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க நேரிடுகிறது. அதே போல 300 ரூபாய் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 3 முதல் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
ஆதார் எண் மூலம் தரிசனம்
திருப்பதியில் கூட்டத்திற்கு ஏற்ப இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும்வகையில் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பக்தர்களின் ஆதார் எண் மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசன அனுமதி அட்டை
இதற்கான சோதனை ஓட்டத்தை இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நேற்று தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டம் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதற்காக திருமலையில் 14 இடங்களில் 117 கவுண்டர்களில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இப்பணியில் 80 மூத்த அதிகாரிகள், 425 பணியாளர்கள் 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் ஆக பணியில் ஈடுபடுகின்றனர்.
பக்தர்களுக்கு புதிய வசதி
இதை பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தில் ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய முடியாத வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 மணிநேரத்தில் தரிசனம்
பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் அட்டை அவசியம். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் நாள்கணக்கில் காத்திருக்கும் நேரம் குறையும். இந்த நடவடிக்கை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழுவதுமாக அமலுக்கு வரும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பழைய முறையும் உண்டு
ஆதார் அட்டை கொண்டு வராதவர்கள் வழக்கம் போல வைகுண்டம் க்யூ காம்ளக்ஸ் மூலம் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை. திருமலை போல திருப்பதியிலும் கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுநாள் வரை விஐபி தரிசனத்திற்கும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கும் ஆதார் கார்டு அவசியமானதாக இருந்தது. இப்போது இலவச தரிசனத்திற்கும் ஆதார் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது.