உயிருக்கு போராடினாலும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் கட்டாயம்.. பொது மக்கள் அதிர்ச்சி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகள் இலவச ஆம்புலன்சில் செல்ல வேண்டுமானால் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளோ அல்லது அவரின் உறவினர்களோ ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தங்களது ஆதார் எண்ணை அளித்தால் மட்டுமே ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு செல்லும் என கூறியுள்ள உத்தர பிரதேச அரசு, நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வருவதாக சொல்லி பல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஏமாற்றுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆம்புலான்ஸ் சேவையை பொதுமக்கள் பெறுவதில் சிக்கல் உள்ளது. பல இடங்களில் இறந்த உடல்கள் தோளில் சுமந்தும், சைக்கிளில் எடுத்து செல்லும் அவல நிலை நீடிக்கின்றது. இது இனியும் தொடரக் கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் எண் அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
இலவச ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கிறது. இதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த உத்தரவால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கிராமப் புறங்களில் ஏராளமான மக்கள் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் சேவை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.